விசிகவுக்கு 2, மதிமுகவுக்கு 1.. காங்கிரஸ் மட்டும் பாக்கி.. இறுதிக் கட்டத்தில் திமுக தொகுதிப் பங்கீடு

Su.tha Arivalagan
Mar 08, 2024,12:51 PM IST

சென்னை: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு வேகமாக நிறைவுக் கட்டத்தை நெருங்கி விட்டது.  இன்று மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும்2 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.


திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் உள்ளன. 


இதில் முதல் ஆளாக இந்தியயூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அடுத்து கொமதேகவுக்கு நாமக்கல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.




இந்த நிலையில் இன்று மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் மதிமுக நிறுவனர் வைகோ மற்றும் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டனர். கடந்த தேர்தலில் ஈரோட்டை மதிமுக பெற்று போட்டியிட்டு வென்றது. இந்த முறை அந்தக் கட்சிக்கு திருச்சிராப்பள்ளி தொகுதி ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது. அத்தொகுதியில் துரை வைகோ போட்டியிடக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2


இதைத் தொடரந்து தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் தொகுதிப் பங்கீடு முடிவடைந்து விட்டது. கடந்த முறை போட்டியிட்டு வென்ற அதே சிதம்பரம் தனி, விழுப்புரம் தனி தொகுதிகள் விசிகவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில்  விசிக தலைவர் தொல். திருமாவளவனும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் கையெழுத்திட்டனர்.


திமுக கூட்டணியில் மிச்சம் இருப்பது காங்கிரஸ் மட்டுமே. அனேகமாக நாளை காங்கிரஸுக்கான தொகுதிப் பங்கீடு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.