இது பார்ட் 1 பட்டியல்தான்.. அடுத்து கருப்புப் பண லிஸ்ட் வரும்.. அண்ணாமலை தகவல்

Aadmika
Apr 14, 2023,11:41 AM IST
சென்னை : திமுகவினர் குறித்து நான் வெளியிட்டிருப்பது முதல் பட்டியல்தான். இன்னும் 3 பட்டியல்கள் அடுத்தடுத்து வரும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் ஊழல் மற்றும் சொத்து விபர பட்டியலை ஏப்ரல் 14 ம் தேதியான இன்று காலை 10.15 மணிக்கு வெளியிட போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். DMKFiles என்ற பெயரில் நேற்றும் ஒரு ட்வீட் போட்டிருந்தார். அவர் என்ன தகவல் வெளியிடப் போகிறார் என்ற பரபரப்பு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.



இதற்கிடையில் பாஜக தலைவர் அண்ணாமலையின் காஸ்ட்லி வாட்ச் பில் ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி, நேற்று முதல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் பாஜக - திமுக என இரு கட்சிகளிலும் இன்று பரபரப்பான சூழல் காணப்பட்டது. யாரை பற்றிய விபரங்களை யார் இன்று வெளியிட போகிறார்கள், அதனால் தமிழக அரசியலில் என்னவெல்லாம் நடக்க போகிறது என்பதை அனைவரும் ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

பாஜக நிர்வாகி வேறு சமீபத்தில் தான் கட்சி கூட்டம் ஒன்றில், நாங்கள் நினைத்தால் அரை மணி நேரத்தில் திமுக ஆட்சியை காலி செய்து விடுவோம் என பேசி உள்ளார். இந்த நிலையில் அண்ணாமலை வேறு திமுக.,வின் ஊழல் மற்றும் சொத்து விபரங்கள் அடங்கிய கோப்புக்களை வெளியிட போவதாக அறிவித்துள்ளார். அவர் என்ன விபரத்தை, யாரை பற்றிய விபரத்தை வெளியிட போகிறார் என்ற ஆர்வம் தான் அனைவரிடமும் ஏற்பட்டது.

ஆனால் இன்று அண்ணாமலை வெளியிட்ட பட்டியல் பெரும் அலையை ஏற்படுத்தவில்லை. காரணம், அனைவருக்கும் பெரும்பாலும் ஏற்கனவே தெரிந்த திமுகவினரின் சொத்துப் பட்டியலைத்தான் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். ஊழல் புகார்கள் எதையும் இன்று அவர் வெளியிடவில்லை. அதேபோல ரபேல் வாட்ச் குறித்து அவர் வெளியிட்ட தகவலும் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. இதை அன்றே அவர் சொல்லியிருக்கலாமே.. ஏன் சொல்லவில்லை என்ற எதிர்கேள்விதான் எழுந்துள்ளது.

அண்ணாமலை பேசுகையில், என் மண் என் மக்கள் ஊழலை எதிர்த்து நடை பயணம் மேற்கொள்வேன். ஜூன்  முதல் வாரம் அல்லது 2வது வாரம் அது தொடங்கும். இது முதல் பட்டியல்தான். 2வது பட்டியலில் கருப்புப் பண விவரம் வெளியாகும். 4 பார்ட் வரை வெளியாகும். அனைத்துக் கட்சிகளையும் சொல்வேன். ஊழல் என்று வந்து விட்டால் ஒரு கட்சியோடு நிறுத்த முடியாது என்றார் அண்ணாமலை.