நீட் தேர்வுக்கு எதிராக ஆகஸ்ட் 20ம் தேதி திமுக உண்ணாவிரதம்

Su.tha Arivalagan
Aug 16, 2023,12:57 PM IST

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், இதை செய்ய மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் ஆகஸ்ட் 20ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நீட் தேர்வை ஒழிக்கக் கோரி தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் தொடர்ந்து போராடி வருகின்றன. திமுக இதை தனது தேர்தல் வாக்குறுதியாகவே அளித்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ஒழிப்போம் என்று அது கூறியிருந்தது. அதன்படி ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி சட்டசபையில் மசோதாவும் கொண்டு வந்தது.




இந்த மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அளிக்காமல் ஆளுநர் தாமதம் செய்ததால் சலசலப்பும் ஏற்பட்டது. பின்னர் இது ஒரு வழியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு விட்டது. இந்த நிலையில் அடுத்தடுத்து நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் தற்கொலையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.


சமீபத்தில் கூட 2 முறை நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றும் கூட அரசு மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைக்காத விரக்தியில் ஜெகதீஸ்வரன் என்ற சென்னை மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அதைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது.




இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் நீட் தேர்வு தொடர வேண்டும். எனக்கு இறுதி அதிகாரம் இருந்தால் அதை ரத்து செய்யவே மாட்டேன். அதுதொடர்பான மசோதாவிலும் கையெழுத்து போடவே மாட்டேன் என்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி முழங்கியிருந்தார்.


இந்த நிலையில் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி ஆகியவை இணைந்து இதை நடத்தவுள்ளன.




இதுதொடர்பாக திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன், மருத்துவ அணி செயலாளர் எழிலன் நாகனாதன், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவ அணி தலைவர் டாக்டர் கனிமொழி என்விஎன் சோமு, மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.


இதுகுறித்து திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவீட்டில், நீட் தேர்வு, தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவை சிதைத்து, அவர்களை மட்டுமன்றி அவர்தம் பெற்றோரையும் மரணத்தை நோக்கி தள்ளுகிறது.




எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும் எனக்கென்ன என்றிருக்கும் ஒன்றிய அரசையும் - ஆளுநரையும் கண்டித்து, கழகத்தலைவர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி,  திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி  சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 20 அன்று மாபெரும் உண்ணாவிரத அறப்போரை நடத்தவுள்ளோம்.


தமிழ்நாட்டின் கல்வி உரிமையையும் - நம் மாணவர்கள் - பெற்றோர்களின் உயிரை காக்கவும் இந்த உண்ணாவிரத அறப்போரில் திரளாக பங்கேற்போம். நீட்டை ஒழிப்போம் என்று அவர் கூறியுள்ளார்.