விக்கிரவாண்டி இடைத் தேர்தல்.. பொன்முடி தலைமையில் தேர்தல் பணிக்குழு.. திமுக அறிவிப்பு

Su.tha Arivalagan
Jun 12, 2024,08:14 PM IST

சென்னை: விக்கிரவாண்டி இடைத் தேர்தல் தொடர்பான பணிகளில் தொடர்ந்து திமுக வேகம் காட்டி வருகிறது. வேட்பாளரை அறிவித்த நிலையில் தற்போது தேர்தல் பணிக்குழுவை திமுக மேலிடம் அறிவித்துள்ளது.


ஜூலை 10ம் தேதி விக்கிரவாண்டி சட்டசபை இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த முறை இங்கு போட்டியிட்ட திமுக மீண்டும் போட்டியிடுகிறது. வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை முதல் ஆளாக திமுகவே அறிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.



அமைச்சர் பொன்முடி தலைமையிலான இக்குழுவில் ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, எம்ஆர்கே பன்னீர் செல்வம், தா.மோ. அன்பரசன், சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அர சக்கரபாணி மற்றும் டாக்டர் ஆர். லட்சுமணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஜூன் 14ம் தேதி அதாவது வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாளன்று, விக்கிரவாண்டியில் உள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும் என்றும், அதில் தேர்தல் பணிக் குழுவினர், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.


விக்கிரவாண்டி தேர்தலில் திமுகவுக்கு நெருக்கடி தர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்தத் தேர்தலில் கட்சியினர் எந்த வகையிலும் சுணக்கம் காட்டி விடக் கூடாது என்பதில் திமுக மேலிடம் வேகமாக உள்ளது. கட்சி நிர்வாகிகளும் கூட நேற்று மாற்றப்பட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.