ஈரோடு கிழக்கு காங்கிரஸுக்கே.. ஒதுக்கியது திமுக.. வேட்பாளர் யார்?

Su.tha Arivalagan
Jan 20, 2023,10:03 AM IST
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திமுக கொடுத்து விட்டது. இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சி ஈரோடு கிழக்கில் போட்டியிட்டது. அதில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட  முக்கிய வேட்பாளர் யுவராஜா ஆவார்.  இவர் தமாகா சார்பில் போட்டியிட்டார். இரட்டை இலை சின்னத்தில் நின்று தோற்றார்.

இந்த நிலையில் சமீபத்தில் திருமகன் ஈவேரா அகால மரணமடைந்தார். இதனால் இத்தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 27ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸே போட்டியிடுமா அல்லது திமுக போட்டியிடுமா என்ற விவாதங்கள் எழுந்தன.  மறுபக்கம் அதேபோல தமாகா மீண்டும் போட்டியிடுமா அல்லது அதிமுக போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. இன்னொரு பக்கம் பாஜகவும் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

இந்த நிலையில்தொகுதியை மீண்டும் காங்கிரஸுக்கே ஒதுக்கியுள்ளது திமுக. இடைத் தேர்தல் தொடர்பாக நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். அப்போது தொகுதியை காங்கிரஸுக்கே ஒதுக்குவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சலசலப்புக்கு திமுக முற்றுப்புள்ளி வைத்து விட்டது.

இடைத் தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்திலிருந்து ஒருவர் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.