சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!
சென்னை: மக்களவையில் வக்பு வாரிய சட்ட மசோதா நிறைவேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பட்டை அணிந்து திமுக கூட்டணி எம்பிகள் சட்டசபைக்கு வருகை தந்தனர்.
மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 288 உறுப்பினர்களும், எதிராக 232 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை அடிப்படையில், 288 உறுப்பினர்களின் ஆதரவுடன் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அதே சமயத்தில் வக்பு வாரிய சொத்துக்களை அபகரிக்கவே ஒன்றிய அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் இன்று கருப்புப்பட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். அப்போது முதல்வர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என அறிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது,
232 உறுப்பினர்கள் என்பது சாதாரண எண்ணிக்கை அல்ல. எண்ணிக்கை கூடுதலாக கிடைத்திருக்கலாம். ஆனால் இந்த சட்ட திருத்தம் எதிர்க்கப்பட கூடியது மட்டுமல்ல. முழுமையாக திருத்தப்படக் கூடியது என்பதுதான் எனது கருத்து. அதைத்தான் நாம் தீர்மானமாக நிறைவேற்றி கடிதம் அனுப்பி இருந்தோம். இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை கட்சிகளின் எதிர்ப்பை மீறி, ஒரு சில கூட்டணி கட்சிகளின் தயவால் அதிகாலை ரெண்டு மணியளவில் இச் சட்டத்தை நிறைவேற்றி இருப்பது இந்திய அரசியலமைப்பின் கட்டமைப்பின் மீது செய்யப்பட்ட தாக்குதல். மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயல். இதனை உணர்த்தும் வகையில் கருப்பு சின்னம் அணிந்து இன்றைய பேரவையில் நாங்கள் பங்கெடுக்கிறோம். சர்ச்சைக்குரிய இந்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.