விக்கிரவாண்டி இடைத் தேர்தல்.. தேமுதிகவும் புறக்கணிக்கிறது.. தேர்தல் ஆணையத்துக்கு சிக்கல்!

Su.tha Arivalagan
Jun 16, 2024,02:44 PM IST

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக நேற்று அதிமுக அறிவித்த நிலையில் இன்று தேமுதிகவும் புறக்கணிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிமுக கூட்டணியிலிருந்து 2வது கட்சியாக தேமுதிகவும் புறக்கணிப்பு முடிவை எடுத்துள்ளது.


தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகள் இடைத் தேர்தலை அறிவித்திருப்பதாலும், தேர்தலில் தில்லுமுல்லுகள் நடைபெறும் என்று இரு கட்சிகளுமே ஒரே மாதிரியாக குற்றம் சாட்டியிருப்பதாலும் தலைமைத் தேர்தல் ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


விக்கிரவாண்டியில் ஜூலை 10ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா களம் காண்கிறார். பாமகவும் தனது வேட்பாளராக  சி. அன்புமணியை அறிவித்துள்ளது.




இந்த நிலையில் தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக நேற்று அறிவித்தது. தேர்தலில் தில்லுமுல்லுகள் நடைபெறும். தேர்தல் ஆணையம் நியாயமாக தேர்தலை நடத்தாது, வன்முறைகள் வெடிக்கும் என்றெல்லாம் அதற்கு காரணத்தைக் கூறியிருந்தது அதிமுக. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவும் தேர்தலைப் புறக்கணிப்பதாக தற்போது அறிவித்துள்ளது. 


இதுதொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது. இதுவரை தமிழகத்தில் நடந்த அனைத்து இடைத்தெர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் போட்டியிட தேமுதிக, விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிக்கிறது. காரணம், தேர்தல் என்பது ஜனநாயக ரீதியாக நேர்மையாக நடக்க வேண்டிய தேர்தல்கள், இன்றைய காலகட்டத்தில் ஆட்சியாளர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் தவறாக நடத்தப்படுகிறது.


இந்த இடைத்தேர்தல் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால் உழைப்பு நேரம் பணம் அனைத்தும் விரயம் செய்ய விரும்பவில்லை. எங்கள் தொண்டர்களின் உழைப்பை வீணடிக்க விரும்பாத காரணத்தால் தேமுதிக இந்த விக்கிரவாண்டி இடை தேர்தலை புறக்கணிக்கிறது.


இன்றைய ஆட்சியாளர்களின் கரங்களில், தேர்தல் என்கின்ற ஜனநாயகம் மிகப்பெரிய கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் நாம் வாழ்கின்றோம் என்று நாம் பெருமையாக சொல்லிக் கொண்டாலும் ஜனநாயகம் என்பது இன்றைக்கு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்பதை ஒட்டுமொத்த மக்களும் கழகத்தினரும் அறிவர். எனவே இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.


பொதுவாக சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தல்களை தலைமைத் தேர்தல் ஆணையம்தான் நடத்தும். இதில் மாநில அரசுக்கு எந்த்த தொடர்பும் இல்லை. ஆனால் சொல்லி வைத்தாற் போல அதிமுகவும், தேமுதிகவும் ஆட்சியாளர்களைக் குறை சொல்லி தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் ஆட்சியாளர்கள் என்று சொல்வது மத்திய ஆட்சியாளர்களையா அல்லது மாநில ஆட்சியாளர்களையா என்று தெரியவில்லை.


விஜயகாந்த் இருந்தவரை எந்தத் தேர்தலையும் அவர் புறக்கணிப்பு செய்ததில்லை. தோல்வி உறுதி என்று தெரிந்தாலும் கூட அவர் துணிச்சலாக போட்டியிடுவார். ஆனால் அதற்கு முற்றிலும் நேர் மாறாக பிரேமலதா விஜயகாந்த் முடிவெடுத்திருப்பது பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி நேற்று எடுத்த முடிவால் அதிமுக தரப்பு அதிர்ச்சி அடைந்தது.. இன்று தனது பங்குக்கு தேமுதிகவினரை ஆச்சரியப்படுத்தியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.


இந்த புறக்கணிப்பு முடிவால் அதிமுக - தேமுதிகவினரின் வாக்குகளை அறுவடை செய்யப் போவது யார் என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. இவர்கள் அனைவரும் அப்படியே பாமகவுக்கு வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த வாக்குகளில் பலவற்றை திமுகவே அறுவடை செய்ய வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது. காரணம், கோவை தொகுதியில் அதுதான் நடந்தது. அங்கு அதிமுக வாக்குகள் குறைந்தன. அதேசமயம், பாஜகவின் வாக்குகள் அதிகரிக்கவில்லை. மாறாக திமுகவுக்கு அதிமுகவின் வாக்குகள் போயின என்பது முடிவுகளில் தெரிய வந்தது. விக்கிரவாண்டியிலும் அதுவே நடக்க வாய்ப்புள்ளது.