எங்க கிட்ட கேட்காம.. கேப்டனை வச்சு எதையும் செய்யாதீங்க.. பெர்மிஷன் வாங்கணும்.. தேமுதிக

Meenakshi
Jul 05, 2024,04:08 PM IST
சென்னை: மறைந்த நடிகர் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தில் திரைப்படங்களில் பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டும் என்று தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த கடந்த ஆண்டு மறைந்தார். அவர் மறைவிற்கு பின்னர் அவருடைய உருவத்தை ஏஐ தொழில்நுட்பத்தில் பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகின. குறிப்பாக கோட் படத்தில் விஜயகாந்த் உருவத்தைக் கொண்டு வர விஜய் விரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து பிரேமலதா விஜயகாந்த்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர்களுக்கு வேண்டும் என்றால் நேரில் வந்து பேசட்டும் என்று கூறியிருந்தார்.



இந்நிலையில், அனுமதி இன்றி இதுபோன்று செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், முறையான அனுமதி பெற்ற பின்னரே ஏஐ தொழில்நுட்பத்தில் பயன்படுத்த வேண்டும் என்று தேமுதிக தலைமை கழகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கை:

தமிழ் திரையுலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள். புரட்சிக் கலைஞர் கேப்டனை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது. இது போன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது. எங்களிடம் முன் அனுமதி இல்லாமல் இது மாதிரி அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும். ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே அனுமதி இல்லாமல் பத்திரிக்கை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.