மக்களுக்காக அல்ல... தேர்தலுக்காக மட்டுமே திமுக அரசு செயல்படுகிறது.. பிரேமலதா விஜயகாந்த்

Meenakshi
Oct 21, 2024,04:24 PM IST

திருப்பத்தூர்: மக்களுக்காக  செயல்படாமல், தேர்தலுக்காக மட்டுமே திமுக அரசு செயல்படுகிறது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த தெரிவித்துள்ளார். 


திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதிக்கு சென்றிருந்த தேமுதி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில் கூறியதாவது:


விஜயகாந்த்தை பொருத்தவரை அன்னை மொழியை காப்போம். அனைத்து மொழியை காப்போம். நமக்கு தமிழ்த் தாய் வாழ்த்து மிக முக்கியம். ஆனால், கவர்னர் பாடவில்லை. நடப்பது தூர்தர்ஷன் நிகழ்ச்சி. யாரோ ஒரு அம்மாதான் பாடுகிறார்கள். கவர்னர் மீது பலி போடுவது தவறானது. 




எந்த சாக்கு கிடைக்கும் யார் மீது பழி போடலாம் என்ற ஆட்சியாளர்கள் எல்லாவற்றையும் அரசியலாக்குகின்றனர். அது தவறு. அதற்கு தூர்தர்ஷன் மன்னிப்பு கேட்டு விட்டார்கள். ஆனால், கவர்னரை நீக்க வேண்டும் என பேசுவது தவறானது.  தவறு யார் செய்தாலும் சகஜம் தான். அதை மன்னிக்க வேண்டும். எல்லாவற்றையும் திமுக அரசியல் வாக்குவது கண்டனத்திற்குரியது. 


ஒரு நாள் மழைக்கே சென்னை தாங்கவில்லை:


ஒரு நாள் மழைக்கே சென்னை தாங்கவில்லை.  4000 கோடி 5000 கோடி ஒதுக்கி இருப்பதாக கூறுகிறார்கள். அந்த காசு எங்கே சென்றது என தெரியவில்லை. சென்னை மட்டுமல்ல தமிழக முழுக்க அனைத்து சாலைகளும் மிக மோசமாக உள்ளது. வாய் வார்த்தையிலும், போட்டோ ஷூட் செய்வதாலும் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. டிசம்பர் மாதம் வரும் பெரும் மழைக்கு அரசு தயாராக வேண்டும். 


அனைத்தையும் வாடகைக்கு எடுக்கும் அரசு:


தீபாவளி பண்டிகை வரப்போகிறது. மக்கள் விடுமுறைக்கு ஊருக்கு சென்று வர போதிய பஸ் தமிழக அரசிடம் இல்லை. அதற்காக, தனியாரிடமிருந்து பேருந்துகளை வாடகைக்கு எடுக்கின்ற நிலை உள்ளது. வாடகைக்கு எடுத்து நடக்கும் அளவிற்கு தமிழக அரசு நிலை உள்ளது. மற்றவர்கள் நம்பி தான் அரசு இருக்கிறது என்றால் அந்த அரசு தேவையில்லை என்று தானே அர்த்தம். அனைத்தையும் வாடகைக்கு எடுக்கும் அரசை வாடகை அரசாக தான் பார்க்க வேண்டி உள்ளது. 


பொதுவாக தமிழக மக்கள் அனைவரும் பயணிக்கின்ற அளவுக்கு போதிய  எண்ணிக்கையில் பேருந்துகள் இல்லை. இருக்கின்ற பேருந்துகளை மிகவும் மோசமான நிலையில் இயங்கி வருகின்றன. தமிழகம் முழுவதும் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. கஞ்சா, கள்ளச்சாராயம், டாஸ்மார்க் வேலை இன்மை, நெசவுத்தொழில் படுபாதாளத்திற்கு சென்று கொண்டு உள்ளது. திமுக கூறிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.


நலிவடையும் தொழிற்சாலைகளை சீரமைக்க வேண்டும்:


ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று உதயநிதி கூறினார். ஆனால், நீட் தேர்வை இதுவரை ரத்து செய்யவில்லை. தேர்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது. மக்களுக்காக அவர்கள் செயல்படவில்லை. தமிழகத்தில் சர்க்கரை ஆலைகள், தோல், காலனி தொழிற்சாலைகள் மூடப்பட்டு வரப்படுவது தடுக்காமல் வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் முதலீட்களை ஈர்த்து வருகிறோம் என்று கூறிக்கொண்டு குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருகின்றனர். ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகள் நலிவடைந்து வருவதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 


2026 தேமுதிகவிற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்: 


தமிழக முதல்வர் இந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்தி மக்களுக்கு தமிழக அரசு நல்லது செய்ய வேண்டும். தமிழக மக்களின் நலனுக்காக விஜயகாந்த் நிறைய பேசி வந்தார். மக்கள் அதனை புரிந்து கொள்ளவில்லை. தேமுகவிற்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இருந்தால் தமிழகத்தில் மக்களாட்சியை விஜயகாந்த் கொடுத்திருப்பார். இப்போதும் காலம் உள்ளது. வருகின்ற 2026 தேமுதிகவிற்கு ஒரு வாய்ப்பு கொடுங்க நிச்சயமாக இந்த அவல நிலை மாறி மக்களாட்சி கொடுப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்