நாட்டிலேயே முட்டாள்கள் அதிகம் இருக்கும் ஊர் பீகார்தான்.. பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சை பேச்சு

Su.tha Arivalagan
Oct 28, 2023,06:29 PM IST

சேலம்: நாட்டிலேயே முட்டாள்கள் அதிகம் இருக்கும் ஊர் பீகார்தான் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


சேலத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது பிரேமலதா விஜயகாந்த் இவ்வாறு கூறியதால் சலசலப்பும் ஏற்பட்டது. ஆனால் தான் சொன்னதை உணராமல் தொடர்ந்து பேசினார் பிரேமலதா விஜயகாந்த்.


பிரேமலதா விஜயகாந்த் பேட்டியலிருந்து:




முன்பு கோவை, மதுரை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தூத்துக்குடி என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆறு மாதத்திற்கு முன்பு வரை பெட்ரோல் குண்டு வீச்சு நடந்தது. இப்போது ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ஆளைக் கடித்த கதையாக ஆளுநர் மாளிகை மீது குண்டு வீசும் நிலை வந்து விட்டது. இது எந்த அளவுக்கு மோசமான நிலையில் நம்ம மாநிலம் இருக்குன்றதை தெளிவாக்குகிறது. 


இன்றைக்கு ஆளுநர் மாளிகைக்கு யார் வந்திருந்தாங்க.. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வந்து தங்கியிருந்தாங்க. ஆளுநர் மாளிகையில்தான் தங்கிருந்தாங்க. அவங்க வந்திருக்கும்போதே குண்டு வீசியிருக்காங்க. இதனால் சென்னை, தமிழ்நாடு மட்டுமல்ல, நாட்டுக்கே பெரும் தலைக்குனிவு ஏற்பட்டு விட்டது.  திமுக வந்தால் வன்முறையைக் கையில் எடுப்பாங்க என்பது வரலாறு. 


குண்டு வீசிய நபரை பாஜகதான் பெயில் எடுத்துச்சுன்னு அவங்க சொல்றாங்க, இன்னொருத்தங்க என்ன சொல்றாங்க திமுகதான் எடுத்துச்சுன்னு.  யார் என்ன என்பதை உளவுத்துறையும், என்ஐஏவும் விசாரித்து தெளிவுபடுத்த வேண்டும்.  இதுபோன்ற பெட்ரோல் குண்டு கலாச்சாரம் இறுதியாக இருக்க வேண்டும். இனி நடக்கவே கூடாது.


நீட் தேர்வு குறித்து தொடர்ந்து மாணவர்களை குழப்பிட்டே இருக்காங்க, திசை திருப்பிட்டே இருக்காங்க, ஏமாத்துறாங்க. சுய நல அரசியல்தான் இதற்குக் காரணம். நான் மாவட்டந்தோறும் போகிறேன், மக்களை சந்திக்கிறேன். ஏன்டா இவங்களுக்கு ஓட்டுப்போட்டோம்னு மக்கள் வருந்தும் நிலையைத்தான் பார்க்க முடிகிறது.


ஒரு கையெழுத்துப் போட்டாங்க நீட் விலக்கு நிறைவேறலை. இப்போ 50 லட்சம் கையெழுத்து வாங்கப் போறாங்க.. அதுவும் நிறைவேறாது. நீட் தேர்வை ஒழிக்க முடியாது. நான் ஏன் இதை உறுதியா சொல்றேன்னா.. நாடு முழுவதும் அந்தத் தேர்வை கொண்டு வந்தாச்சு. சுப்ரீம் கோர்ட்டே முடியாதுன்னு சொல்லிருச்சு. தமிழ்நாட்டுக்கு மட்டும் எப்படி ஒழிக்க முடியும்.


இப்படி நடக்க முடியாத விஷயத்தை வச்சு ஏன் மாணவர்களை  குழப்பறீங்க, திசை திருப்பறீங்க. மாணவர்கள் இனியும் இவர்களை நம்பத் தயாராக இல்லை. ஆரம்பத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால் இப்ப மாணவர்கள் புரிஞ்சிக்கிட்டு தெளிவாய்ட்டாங்க.  படிக்க ஆரம்பிச்சுட்டாங்க. 


இந்தியாவிலேயே அதிக முட்டாள்கள் உள்ள ஊர் பீகார். படிப்பறிவு கிடையாது. அவர்களே ஏற்றுக் கொண்டு தேர்வுக்கு தயாராகிட்டாங்க. தமிழ்நாடு மாணவர்கள்தான் நாட்டிலேயே அறிவாளியான ஸ்டூடண்ட்ஸ். ஏன் அவர்களை தவறா வழி நடத்தறீங்க. நீட்டை ஒழிப்போம்னு உதயநிதி சொல்லிட்டார்னு, அதையே பிடிச்சு தொங்கிட்டிருக்கீங்க.  மாணவர்களை குழப்பாதீங்க. ஓரிரு ஆண்டுகளில் அதிக மார்க் வாங்கி தமிழ்நாட்டு மாணவர்கள் அதிக அளவில் ஜெயிக்கப் போறாங்க. பார்த்துட்டே இருங்க என்றார் பிரேமலதா விஜயகாந்த்.