அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்டதும்.. மகாவிஷ்ணு பேசியதும் தவறில்லை.. பிரேமலதா விஜயகாந்த்

Meenakshi
Sep 14, 2024,03:42 PM IST

சென்னை: ஜிஎஸ்டி தொடர்பாக அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் நிதி அமைச்சரை சந்தித்து மன்னிப்பு கேட்டதும், மகாவிஷ்ணு பள்ளியில் பேசியதும் தவறு இல்லை. மகாவிஷ்ணு விவகாரம் பூதாகரமானதை பார்த்தேன். ஆனால், அது அவ்வளவு பெரிய விஷயம் கிடையாது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தேமுதிகவின் 20ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவின் போது செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், இன்று முதல் தேமுதிக அலுவலகம் கேப்டன் ஆலயம் என அழைக்கப்படும் என்றும் அதற்கான  பெயர் பலகையை திறந்து வைத்துள்ளோம். என்னென்ன முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. எத்தனை பேர் வேலை வாய்ப்பை பெற உள்ளனர் என்பதை வெள்ளை அறிக்கையாக அவர்கள் வெளியிட வேண்டும்.




ஜிஎஸ்டி குறித்த அன்னபூர்ணா உரிமையாளர் தனது கருத்தை எடுத்துச் சொன்னார். அவர் எதார்த்தமாகத்தான் சொல்கிறார். அதை நிதி அமைச்சரும் ஸ்போர்ட்டிவாகதான் எடுத்துக்கொண்டார். இதில் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் ஊடகங்கள் பெரிது பண்ணுகின்றன. அவரே தான் நிதி அமைச்சரை பார்க்க போனார் என்று சொல்லப்படுகிறது. திமுகவும், காங்கிரஸ்சும் இதனை பூதாகரமாக ஆக்குகின்றனர். என்னை பொறுத்தவரை இது எதார்த்தமாக நடந்த ஒன்றாகத்தான் நான் பார்க்கின்றேன்.


விடுதலை சிறுத்தை கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டுக்கு இதுவரை அழைப்பு வரவில்லை. அழைப்பு வந்தால் யாரை அனுப்புவது என்று ஆலோசித்து கூறுகிறேன். மகாவிஷ்ணு பள்ளியில் பேசியதும் தவறு இல்லை. மகாவிஷ்ணு விவகாரம் பூதாகரமானதை பார்த்தேன். ஆனால், அது அவ்வளவு பெரிய விஷயம் கிடையாது. 


2026ல் நடக்க இருக்கும் தேர்தலை எதிர் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். நாங்கள் இப்போது அதிமுகவுடன் கூட்டணியில் இப்போது இருக்கிறோம். இது தொடரும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்