சந்தோஷத்தைப் பறி கொடுத்த தேமுதிக.. விருதுநகரில் பின்னுக்குப் போய் விட்டார் விஜய பிரபாகரன்!

Su.tha Arivalagan
Jun 04, 2024,11:38 AM IST

சென்னை : தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் இல்லாத நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தேமுதிக கட்சிக்கு இந்த லோக்சபா தேர்தலில் புத்துயிர் கிடைக்கும் வாய்ப்பு உருவானது.. ஆனால் தற்போது அந்த கனவு நிராசையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. விருதுநகரில் விஜய பிரபாகரன் பின்னுக்குப் போய் விட்டார்.


2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கட்சியை விஜயகாந்த் துவங்கினார். கட்சி துவங்கிய அடுத்த ஆண்டே 2006ல் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 8.38 சதவீதம் ஓட்டுக்களை பெற்றது. அதிமுக- திமுக.,விற்கு பிறகு தேமுதிக., தான் என மக்கள் நினைக்கும் அளவிற்கு விஜயகாந்த் மற்றும் தேமுதிக.,வின் அரசியல் வளர்ச்சி ஏற்பட்டது. 2011ம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ., எதிர்க்கட்சி தலைவர் என்று ஆனாலும் அந்த தேர்தலில் தேமுதிக.,வின் ஓட்டு வங்கி 7.88 சதவீதமாக குறைந்தது.




அதுவே 2016 தேர்தலில் 2.39 சதவீதம் என்ற அளவிற்கு கடுமையாக சரிந்தது. லோக்சபா தேர்தலை பொறுத்தவரை 2009 ம் ஆண்டு மட்டுமே தேமுதிக தனித்து நின்று 40 தொகுதிகளிலும் போட்டியிட்டது. அதற்கு பிறகு கூட்டணி அமைத்தே போட்டியிட்டது. ஆனால் இதுவரை ஒரு இடத்தில் கூட தேமுதிக.,வால் வெற்றி பெற முடியவில்லை. விஜயகாந்த் தீவிர அரசியலில் இருந்த போதிலும், உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்த போதும் தேமுதிக.,வின் ஓட்டு வங்கி சரிவையே சந்தித்தது. 


இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் தேமுதிக தலைவரான விஜயகாந்த் காலமானார். இதனால் இனி கட்சியின் எதிர்காலம் என்ன ஆகுமோ, தொண்டர்கள் வேறு கட்சிகளுக்கு சென்று விடுவார்களோ என்ற குழப்பம் ஏற்பட்டது. ஆனால் விஜயகாந்த்தின் மறைவிற்கு பிறகு நடந்துள்ள முதல் தேர்தலில், அதுவும் லோக்சபா தேர்தலில் தேமுதிக சார்பில் விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டு வெற்றியை நோக்கி காலையிலிருந்து நடை போட்டு வந்தார்.


விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள இவரை எதிர்த்து பாஜக சார்பில் நடிகை ராதிகா  சரத்குமார் போட்டியிடுகிறார். இருந்தாலும் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதலே விஜய பிரபாகரன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். விருதுநகர் தொகுதியில் இவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருதப்பட்டது. இதனால்  தேமுதிகவினர் உற்சாகமானார்கள்.


விஜய பிரபாகரன் வெற்றி  பெற்றால் அது தேமுதிகவுக்கு பல வகையிலும் உதவியாக இருக்கும். கட்சி புத்துயிர் பெறும், அதிமுகவைத் தாண்டி தேமுதிக வெற்றி பெறுவதால் அதிமுகவை விட நாங்கள் பலமானவர்கள் என்று சொல்லிக் கொள்ள உதவியாக இருக்கும், இந்த வெற்றியைக் காரணம் காட்டி தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட கூட்டணிக் கட்சியிடம் சீட் கேட்க உதவியாக இருக்கும், தேமுதிகவை நோக்கி முக்கிய கட்சிகளைத் திருப்ப உதவியாக இருக்கும், டெல்லியிலும் லாபி செய்ய இது வசதியாக இருக்கும். இப்படி பல வகையிலும் தேமுதிகவுக்கு இந்த வெற்றி உதவியாக இருக்கும் என்பதால் தேமுதிகவினர் புத்துணர்ச்சியுடன் இருந்தனர். ஆனால் தற்போது விஜய பிரபாகரன் பின்னுக்குப் போயுள்ளது அந்தக் கட்சியினரை சோர்வடைய வைத்துள்ளது.