வெகுவிரைவில் மக்கள் திமுக ஆட்சியை புறக்கணிப்பார்கள்.. பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
சென்னை: தமிழக மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை புறக்கணிப்பதைப் போல, வெகுவிரைவில் 2026ல் இந்த ஆட்சியையும் புறக்கணிப்பார்கள். அது மட்டுமல்லாமல் இந்த அரசின் மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் ரொக்கத் தொகை வழங்கப்படாமல், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பொங்கல் தொகுப்பை தமிழ்நாடு அரசு வழங்கியது. இதற்காக 2. 20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ஆகிய பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
இந்தாண்டு ரொக்கப் பணம் வழங்காததினால், மக்கள் கடும் கோபத்தில் உள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு, ஆண்டுதோறும் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த 2020ல் ஆயிரம் ரூபாய், 2021ல் 2500 ரூபாய், 2022-ல் ஆயிரம் ரூபாய், கடந்த 2023ல் ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட்டது. ரொக்கமும் சேர்த்து வழங்கப்பட்டதால் கடந்த ஆண்டுகளில், அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்கு மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகிய மூன்று பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, ரொக்க பணம் வழங்கப்படவில்லை.
மொத்தம் 2.21 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகுப்பை, 1.87 கோடி பேர் வாங்கியுள்ளனர். மீதி 33 லட்சம் பேர் வாங்கவில்லை. விளம்பர மாடல் ஆட்சியிலே பொங்கலுக்கு வழங்கிய பரிசுத்தொகுப்பினை மக்கள் புறக்கணித்துள்ளனர், கொடுத்த அரிசியும், சர்க்கையும் எடை குறைவாக வழங்கப்பட்டதாகவும், திமுக அரசு சொன்ன வாக்குறுதிப்படி ரொக்க பணம் கொடுக்காததாலும், தமிழக மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை புறக்கணிப்பதைப் போல, வெகுவிரைவில் 2026 இந்த ஆட்சியையும் புறக்கணிப்பார்கள். அது மட்டுமல்லாமல் இந்த அரசின் மீது அதிர்ச்சியால் தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்