காலமானார் "கேப்டன்" விஜயகாந்த்.. மறைந்தது அரசியலின் புதிய சகாப்தம்.. அதிர்ச்சியில் தமிழ்நாடு!

Su.tha Arivalagan
Dec 28, 2023,09:03 AM IST

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் காலமானார் என்ற தவகல் வெளியாகி அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல் நலம் குன்றிய நிலையில் இருந்தார். அவ்வப்போது மருத்துவமனைக்குச் செல்வதும் சிகிச்சை பெறுவதுமாக இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு உடல் நலக்குறைவில் பின்னடைவு ஏற்படவே சில நாட்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதன் பின்னர் பூரண குணமடைந்து திரும்பினார்.




அதன் பின்னர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்திற்கு விஜயகாந்த் அழைத்து வரப்பட்டார். சக்கர நாற்காலியில் அமர வைத்து விஜயகாந்த்தை அழைத்து வந்தனர். அவரால் சரியாகக் கூட உட்கார முடியவில்லை. உடலை அசைக்க முடியவில்லை. பக்கத்திலேயே 2 பேர் அவருக்கு பாதுகாப்பாக இருந்தனர்.  இந்த நிகழ்வின்போது தேமுதிக தலைவராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு வீரவாள் கொடுத்து முடி சூடப்பட்டது.


இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் விஜயகாந்த்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குப் பரிசோதனைகள் எடுக்கப்பட்டன. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்தப் பின்னணியில் தற்போது அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.


அவரால் இயல்பாக சுவாசிக்க முடியவில்லை. இதையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தி சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனளிக்காமல் விஜயகாந்த் காலமாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  விஜயகாந்த் எப்படியும் நலம் பெற்று வந்து விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் மரணச் செய்தி வந்திருப்பது அனைவரையும் சோகத்தில்  ஆழ்த்தியுள்ளது.