யாருடன் கூட்டணி?.. பிப்ரவரி 7ம் தேதி தீர்மானிக்கிறது தேமுதிக.. மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு!

Su.tha Arivalagan
Feb 02, 2024,07:17 PM IST

சென்னை: லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கிய ஆலோசனை மற்றும் முடிவு எடுப்பதற்காக பிப்ரவரி 7ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார். அன்றைய கூட்டத்தில் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.


கடந்த 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றிருந்தது. அதில் பாஜக உள்ளிட்ட கட்சிகளும் பங்கு வகித்தனர்.  இதில், கள்ளக்குறிச்சி (எல்.கே.சுதீஷ்), திருச்சி, விருதுநகர், வட சென்னை ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு நான்கிலும் தோல்வியைச் சந்தித்தது தேமுதிக.


தற்போது எந்தக் கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது என்பது இதுவரை தெளிவாகவில்லை. அதிமுக மற்றும் பாஜகவுடன் மறைமுகமாக பேச்சுவார்த்தையில் தேமுதிக ஈடுபட்டிருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இதில் தங்களுக்கு தாங்கள் கேட்கும் நான்கு தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் யார் தருகிறார்களோ அவர்களுடன் கூட்டணி அமைக்க தேமுதிக தயாராக இருப்பதாக தெரிகிறது.




என்னதான் அதிமுக பக்கமிருந்து தேமுதிகவுக்கு அழுத்தம் அதிகம் வந்தாலும் கூட, பாஜகவிடமிருந்தும் மிகப் பெரிய அளிவிலான அழுத்தம் வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதேசமயம், நான்கு தொகுதிகளை பாஜக தருமா என்பது சந்தேகம். அதற்குப் பதில் ராஜ்யசபா தொகுதியையும், தேமுதிக கேட்கும் 2 தொகுதிகளையும் கொடுக்க பாஜக முன்வரலாம் என்று கூறப்படுகிறது. வாய்ப்பிருந்தால், மத்திய அரசிலும் இணை அமைச்சர் அல்லது துணை அமைச்சர் பதவியையும் கூட பாஜக தரவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.


இந்த நிலையில்தான் பிப்ரவரி 7ம் தேதி மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.  இந்தக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் இறந்து ஒரு மாதம்தான் ஆகிறது. அடுத்த வாரம் அரசியல் பேசலாம் என்று போன வாரம்தான் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். அதன்படி அடுத்த வாரம் அவர் முக்கிய முடிவுகளை செய்தியாளர்களிடம் அவர் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.