"எங்க தலைவருக்கு "பீச்"சுல இடம் தரனும்".. தேமுதிக தொண்டர்கள் கண்ணீர் கோரிக்கை!

Meenakshi
Dec 28, 2023,06:56 PM IST

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இறந்த செய்தி கேட்டது முதல் கதறி அழுது கொண்டிருக்கும் அவரது தொண்டர்களும், ரசிகர்களும், விஜயகாந்த்துக்கு சென்னை கடற்கரையில் இடம் தர வேண்டும் என்று உருக்கமான கோரிக்கை வைத்துள்ளனர்.


சென்னை மெரீனா கடற்கரையில், மறைந்த முதல்வர்கள் அண்ணாதுரை, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்கு இதுவரை இடம் தரப்பட்டுள்ளது. வேறு யாருக்கும் அங்கு இடம் தரப்பட்டதில்லை. பெரியாருக்குக் கூட அங்கு இடம் கொடுக்கப்படவில்லை. 


சுதந்திரத்திற்கு பிறகு தமிழகத்தில் முதல்வராக இருந்தவர்களில், சி.என்.அண்ணாதுரைக்கு தான்  முதன் முதலில் கடற்கரையில் இடம் அளிக்கப்பட்டது. அவரது இறப்பிற்கு முன்னர் பதவியில் இருக்கும் போது யாரும் இறக்கவில்லை. அண்ணாதுரை தான் ஆட்சி காலத்தில் மறைந்தவர். அண்ணாதுரையின் உடல் குடும்ப வழக்கப்படி எரியூட்டத்தான் திட்டமிடப்பட்டிருந்தது.




ஆனால், அப்போது ஆட்சியில் இருந்த திமுக அதை விரும்பவில்லை. அண்ணா அனைவருக்குமானவர், அவருக்கு உரிய கெளரவம் தரப்பட வேண்டும் என்று கருதிய அப்போதைய திமுக முக்கியத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உந்துதலின் பேரில் தான் அண்ணாத்துரை உடல் கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.


அதன் பின்னர் 1987ல் எம்.ஜி.ஆர் மரணமடைந்த போது தான் மீண்டும் கடற்கரையில் உடல் அடக்கம் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து  அண்ணா சமாதிக்கு அருகிலேயே அடக்கம் செய்ய அப்போதைய தமிழக அமைச்சரவை முடிவு செய்தது. இதன் பின்னர் தான் கடற்கரையில் உடல் அடக்கம் என்பது முக்கியமானதாக மாறியது.


2016ல் ஜெயலலிதா மரணம் அடைந்த போது அவரது உடலையும் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய அமைச்சரவை முடிவெடுத்தது. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தின் அருகிலேயே ஜெயலலிதாவின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. அதன் பின்னர் கருணாநிதி மறைந்தபோது அரசு உடல் அடக்கத்திற்கு இடம் தரவில்லை. ஹைகோர்ட்டுக்குப் போய் வழக்குப் போட்டு போராடித்தான் கருணாநிதியின் உடல் அடக்கத்திற்கு இடம் பெற்றது திமுக.




கருணாநிதிக்குப் பிறகு மிகப் பெரிய மரணமாக விஜயகாந்த் மரணம் வந்து சேர்ந்துள்ளது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக மட்டுமே இருந்துள்ளார். ஆனால் எம்ஜிஆர்,  கருணாநிதி, ஜெயலலிதா அளவுக்கு அவரும் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் தனிப் பெரும் இடத்தைப் பிடித்தவர். எனவே அவருக்கும் கடற்கரையில் இடம் தர வேண்டும் என்ற கோரிக்கையை தேமுதிகவினர் எழுப்பியுள்ளனர்.


இதுவரைக்கும் முதல்வர் பதவி வகித்தவர்கள் தான் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ள்ளனர்.   எதிர் கட்சி அந்தஸ்தை பெற்றவராக இருந்தாலும் கூட மக்களின் அன்பைப் பெற்ற தலைவர் விஜயகாந்த். எனவே அவருக்கும் கடற்கரையில் இடம் தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இருப்பினும் அதற்கான வாய்ப்பு உள்ளதா என்று தெரியவில்லை.