"பாஜக அரசால் ஒரு நன்மையும் இல்லை".. பாயும் தேமுதிக.. அப்படீன்னா யாருடன் கூட்டணி?

Meenakshi
Oct 04, 2023,01:13 PM IST

சென்னை: மத்திய அரசால் தமிழ்நாட்டுக்கு என்ன நன்மை கிடைத்திருக்கிறது, ஒன்றுமேயில்லை. தமிழ்நாட்டுக்கு யாரு நன்மை செய்றாங்களோ, அவங்க கூடதான் கூட்டணி  என்று ஒவ்வொரு தமிழ்நாட்டு கட்சியும் முடிவு பண்ணனும் என்று  தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.


தமிழ்நாட்டு அரசியலில் ஒரு காலத்தில் மிகப் பெரிய சக்தியாக, திருப்புமுனையாக பார்க்கப்பட்ட கட்சிதான் தேமுதிக. 2005 செப்டம்பர் 15ம்  தேதி இந்தக் கட்சியைத் தொடங்கினார் விஜயகாந்த். கட்சி ஆரம்பிக்கப்பட்டதும்  தேர்தலில் தனித்து தான் போட்டியிட்டது. முதல் தேர்தலில் விஜயகாந்த் போட்டியிட்ட விருத்தாச்சலம் தொகுதியில் மட்டும் வெற்றி கிடைத்தது. ஆனால் தனது வாக்கு வங்கியை வெளிக்காட்டி பிற கட்சிகளை அதிர வைத்தது.




இதைத் தொடர்ந்து தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க திமுகவும், அதிமுகவும் தீவிரமாக முயன்றன. இதில் அதிமுக பக்கம் சாய்ந்தது தேமுதிக. 2011ம் ஆண்டு நடைபெற்ற  சட்டப்பேரவை தேர்தலில் முதல் முறையாக தேமுதிக - அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. அதிமுக ஒதுக்கிய 41 தொகுதிகளில் 29 தொகுதிகளில் தேமுதிக வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சி ஆனது. திமுகவை பின்னுக்குத் தள்ளியது. விஜயகாந்த் எதிர்கட்சி தலைவரானார். 


ஆனால் எந்த வேகத்தில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றாரோ அதே வேகத்தில் ஜெயலலிதாவுடன் முரண்பட்டு முட்டி மோதி கூட்டணியை விட்டு வெளியேறினார் விஜயகாந்த்.  அதன் பிறகு வந்த தேர்தல்களில் தேமுதிக தேய் பிறையானது. அதன் பின்னர் 3வது அணி அமைத்தனர். பிறகு பாஜகவுடன் இணைந்தனர். எதுவுமே தேமுதிகவுக்கு புத்துயிர் கொடுக்கவில்லை. தொடர்ந்து தோல்விகள் மட்டுமே கிடைத்து வந்தன.


இன்று வரை சரிவை நோக்கியதாகவே தேமுதிகவின் நிலை உள்ளது. இதற்கிடையில் விஜயகாந்த் உடல்நிலையும் பாதிக்கப்பட்டதால் கட்சி மேலும் பலவீனமடைந்தது. இந்த நிலையில் வரும் லோக்சபா தேர்தலை மனதில் வைத்து பிரேமலதா விஜயகாந்த் அடிக்கடி வெளியே வர ஆரம்பித்துள்ளார். பேட்டிகள் கொடுக்கிறார், போராட்டங்களுக்குத் தலைமை தாங்குகிறார். டெங்கு நோயாளிகளைக் கூட பார்த்து நலம் விசாரித்துள்ளார். கூட்டணி பற்றியும் பேசி வருகிறார்.




பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது கூட்டணி குறித்துக் கூறுகையில், மத்திய அரசால் தமிழ்நாட்டுக்கு என்ன நன்மை கிடைத்திருக்கிறது, ஒன்றுமேயில்லை. தமிழ்நாட்டுக்கு யாரு நன்மை செய்றாங்களோ, அவங்க கூடதான் கூட்டணி  என ஒவ்வொரு தமிழ்நாட்டு கட்சியும் முடிவு பண்ணனும் என்று கூறியிருக்கிறார். 


இவ்வாறு பாஜகவை விமர்னம் செய்திருப்பதில் இருந்து பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.  இதனால்,வரும் தேர்தலில் தேமுதிக  திமுகவுடன் கூட்டணி வைக்குமா? அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா? இல்லை என்றால் புதிய கூட்டணி எதுவும் உருவாக்குமா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


திமுக - தேமுதிக இடையே ரகசிய உடன்பாடு முடிந்து விட்டதாக கூட ஒரு பேச்சு உள்ளது. அதேசமயம், அதிமுகவும், தேமுதிகவை விடாது. கூடவே பாமகவும் இருப்பதால் வட மாவட்டங்களில் தங்களால் கடும் நெருக்கடியைக் கொடுக்க  முடியும் என்று அதிமுக கணக்குப் போடும். எனவே அது தேமுதிகவை விடாது. 


கடந்த லோக்சபா தேர்தலில் தேமுதிக பாஜகவுடன் கூட்டணி வைத்து தோல்வியையே சந்தித்திருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. எனவே இந்த முறை தேமுதிகவின் நிலைபாடு எப்படி இருக்கும் என்பதனை பெருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.