விழுப்புரத்தில்.. மே 15க்குள் தமிழில் பெயர் பலகைகள் மாற்ற வேண்டும்.. மாவட்ட கலெக்டர் உத்தரவு!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மே 15ஆம் தேதிக்குள் அனைத்து கடைகள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் கட்டாயம் தமிழில் இருக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார்.
ஒன்றிய அரசு அறிவித்த மும்மொழிக் கொள்கை எனப்படும் இந்தி திணிப்பு குறித்து தமிழ்நாட்டில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. இந்த திட்டத்தை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது இரு மொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் மத்திய அரசு இத்திட்டத்தை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கு வழங்கப்படும் நிதியை ஒதுக்க முடியும் என ஆணித்தரமாக கூறிவிட்டது. அதற்கு தமிழ்நாடு அரசு மத்திய அரசு நிதி ஒதுக்காவிட்டாலும் நாங்கள் ஒருபோதும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இதனால் அரசு, தமிழின் முக்கியத்துவத்தையும், மொழி உணர்வையும் எடுத்துக் கூற மக்களிடையே பல்வேறு வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி மக்கள் கூடும் முக்கிய இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்தியில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் நீக்கப்பட்டு தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து பெயர் பலகைகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.இந்த உத்தரவில் அவர் கூறியதாவது,
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள், கல்வி நிறுவனங்கள், என அனைத்திலும் மே 15 ஆம் தேதிக்குள் பெயர் பலகைகள் கட்டாயம் தமிழில் இருக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும்.
குறிப்பாக பெயர் பலகையில் தமிழ் மொழி முதன்மையாகவும் பின்னர் ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும். அதன் பிறகு அவரவர் விரும்பும் மொழிகளில் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட மாவட்ட அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக வும் அவர் தெரிவித்துள்ளார்.