"ஞானவேல்ராஜா அவர்களே.. நாங்க பேச ஆரம்பிக்கட்டா?".. களத்தில் குதித்தார் இன்னொரு இயக்குநர்!

Meenakshi
Dec 14, 2023,06:58 PM IST

சென்னை:  இயக்குநர் அமீருக்கு ஆதரவாக இன்னும் ஒரு இயக்குநர் களத்தில் குதித்துள்ளார். தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார் இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன்.


இயக்குநர் - நடிகர் சசிக்குமார் நடித்த சுந்தர பாண்டியன் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகியவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இயக்குநர் அமீர் - ஞானவேல் ராஜா விவகாரத்தில் பலரும் ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது எஸ்.ஆர்.பிரபாகரனும் இணைந்துள்ளார்.


அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:




தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவர்களுக்கு நன்றி....


அடித்த புயலில் ஒரு உண்மை செத்துவிடக்கூடாது என்பதற்காக - இந்த கடிதம். இதுவரை 17 ஆண்டுகளாக அண்ணன் அமீர் அவர்கள் மீது - நீங்கள் தூவிய விஷவிதை விருட்சமாய் மாறி - அண்ணன் அமீர் அவர்களின் திரை பயணத்தையே திசைமாற்றி போட்டுவிட்டது. நீங்கள் திட்டமிட்டு பரப்பிய எந்த குற்றச்சாட்டுக்கும் அவர் இதுவரை எந்த பதிலையும் தரவில்லை. ஆனால், அவரை ஒரு பொய்யனிடமிருந்து காப்பாற்ற ஒரு பெரும் படையொன்று திரண்டு அவர் பின்னால் அல்ல - முன்னால் நிற்கிறது. அவர்கள் பேசிய உண்மைகள் அண்ணன் அமீர் அவர்கள் - எவ்வளவு நேர்மையானவர், எப்படிப்பட்ட படைப்பாளி, என்று உலகறிய செய்திருக்கிறது.


மௌனம் பேசியதே , ராம், பருத்திவீரன் - இந்த மூன்று படைப்புகளுமே போதும் அண்ணன் அமீர் அவர்களை - இன்னொரு பாரதிராஜா - வாக ஏற்றுக்கொள்ள எனத் தோன்றுகிறது. அவர் மீது நீங்கள் சேற்றை வாரி இறைத்து -அவருக்கு ஆதரவாக எல்லோரையும் உண்மை பேச வைத்து, அவரின் பெருமைகளை உலகறிய செய்ததற்காக, உங்களுக்கு பெரும் நன்றி


உண்மை என்று ஏதேதோ பேசினீர்களே, இப்போது நாங்கள் உண்மை பேச ஆரம்பிக்கட்டா? ஒரு அரசியல் பின்புலம் கொண்டவரிடம் பணத்தை பல மடங்கு பெருக்கி தருவதாக கூறி  100 கோடி பெற்று, பின் மொத்த பணத்தையும் தராமல் நீங்கள் ஏமாற்றி விட்டதாக, ஒரு செய்தி திரைத்துறை எங்கும் உலா வருகிறதே - அதை பற்றி பேசுவோமா? அல்லது உங்களின் உண்மைத்தன்மை பற்றி பேசுவோமா?


உங்களின் கிரிமினல்தனத்தால் இன்னும் உங்களை பற்றிய உண்மைகள் வெளிவரப்போகிறது. இதற்கு ஒரே தீர்வு - பேட்டியோ, மன்னிப்பு கடிதமோ அல்ல , நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைவாக முடித்துக்கொண்டு , இடையில் பேசும் இடைத்தரகர்களின் பேச்சில் மாட்டிக்கொள்ளாமல் 17 ஆண்டுகளுக்கு முன்பு - எவ்வளவு பணத்தை ஏமாற்றுனீர்களோ - அதன் இன்றைய மதிப்பு என்னவோ -அதை - அண்ணன் அமீர் அவர்களிடம் காலம் தாழ்த்தாமல் ஒப்படைத்து - இந்த பிரச்சனையை - நீங்கள் முடித்து கொள்வதுதான்.


அதுவரை...!  ஓயாது அலைகள் என்று இயக்குனர் பிரபாகரன்  கூறியுள்ளார். அடுத்தடுத்து அமீருக்கு ஆதரவாக பலரும் களம் இறங்கினாலும் கூட, பாரதிராஜா அறிக்கைக்குப் பின்னர் வெளியிட்ட "விளக்க" அறிக்கையோடு ஞானவேல்ராஜா தரப்பு மெளனமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.