"கேப்டன் விஜயகாந்த் எனக்கு அப்பா".. படத் திறப்பு விழாவில் நெகிழ்ந்த ஆர்.கே.செல்வமணி

Su.tha Arivalagan
Jan 27, 2024,05:28 PM IST

சென்னை: கேப்டன் விஜயகாந்த் எனக்கு ஒரு அப்பா போல. ஒரு இயக்குநராக இங்கு நான் வரவில்லை என்று விஜயகாந்த் படத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி உருக்கமாக கூறினார்.


சமீபத்தில் பல துரதிர்ஷ்டவசமான சம்பவங்களைக் கண்டது திரையுலகம். கேப்டன் விஜயகாந்த் மரணமடைந்தார்.. நடிகர் போண்டா மணி மரணமடைந்தார். நிறைய இழப்புகளை சந்தித்து விட்டது திரையுலகம்.




இந்த நிலையில், தமிழ்நாடு மேடைநடன கலைஞர்கள் தலைமை சங்க நிர்வாகிகள் தலைவர் பிரேம் நாத், செயலாளர் எல்.கே.அந்தோனி, பொருளாளர் எம்.ஜி.ஆர்.இக்பால் ஆகியோர் சங்கம் சார்பில், கேப்டன் விஜயகாந்த், சினிமா பிஆர்ஓ கடையம் ராஜூ, காமெடி நடிகர் போண்டா மணி ஆகியோருக்கு படத்திறப்பு மற்றும் நினைவஞ்சலி கூட்டம் நடத்தினார்கள்.




இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, அரவிந்தராஜ், செந்தில்நாதன், பாரதி கணேஷ், நடிகர்கள் முத்துக்காளை, பெஞ்சமின், சாரபாம்பு சுப்புராஜ், வெங்கல் ராவ், ஜூலி பாஸ்கர், ஜெய சூர்யா, ராஜ் காந்த்,  சிவகுமார், லொள்ளு சபா ஜீவா, சிவன் சீனிவாசன் ஆகியோர் கலந்துக் கொண்டு, அஞ்சலி செலுத்தினார்கள்!


இயக்குனர் ஆர்.கே. செல்வமணி பேசுகையில், 'ஒரு நடிகருக்கு ஒரு இயக்குனர் படம் திறந்து வைப்பதாக வரவில்லை. ஒரு அப்பாவுக்கு ஒரு மகன் படம் திறந்து வைப்பதாக உணர்கிறேன்' என்றார்.  இயக்குநர் செந்தில்நாதன் பேசமுடியாமல் கண் கலங்கினார். அவர் பேசுகையில், திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தவர் கேப்டன் என்றார்.




காமெடி நடிகர் போண்டா மணி குடும்பத்தினருக்கு, இயக்குனர் ஆர் கே செல்வமணி கையால், தமிழ்நாடு மேடைநடன கலைஞர்கள் தலைமை சங்க தலைவர் பிரேம் நாத் உதவித் தொகை வழங்கினார். நிகழ்ச்சியை பிரியங்கா ரோபோ சங்கர் ஒருங்கிணைத்தார். மக்கள் தொடர்பை கோவிந்தராஜ் கவனித்தார்.