மழை வெள்ளத்தால்.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு.. இன்னும் விடாமல் உதவி வரும்.. மாரி செல்வராஜ்!

Manjula Devi
Dec 23, 2023,04:39 PM IST

தூத்துக்குடி: பாதிக்கப்பட்ட மக்களை தண்ணீரில் இருந்து காப்பாற்றுவதோடு மட்டும் கடமையை  முடிக்காமல்,க டைசி வரை மக்களுக்கு சரியான நிவாரணத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற முனைப்பில் இன்னும் அங்கேயே முகாமிட்டு பணியாற்றி வருகிறாராம் இயக்குனர் மாரி செல்வராஜ்.


பரியேறும் பெருமாள் என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். பா. ரஞ்சித்திடம் உதவியாளராக இருந்தவர். இப்படம் வெளிவந்து மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படத்திற்காக பல விருதுகளையும் பெற்றார். இப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் மிகப் பெரிய அளவில் பேசுபொருளானது. 


இதைத் தொடர்ந்து அவர் இயக்கிய படம் மாமன்னன், நடிகர் வடிவேலுவை வேறு பரிமாணத்தில் காட்டியது. படத்தின் கதையும் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படமும் மாரி செல்வராஜின் மிகச் சிறந்த பட வரிசையில் இணைந்தது.




இந்த நிலையில், வரலாறு காணாத பெரு மழையால் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் தண்ணீர் சூழ்ந்து தனி தீவானது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட பெருவள்ளத்தால் மக்கள் வீடுகள் இழந்து நிற்கதியாய் நின்றனர். இந்த நிலையைக் கண்டு பலரும் தங்களின் ஆதரவை அளித்து பல்வேறு பகுதிகளில் இருந்து தங்களால் இயன்ற உதவிகளை செய்து வந்தனர்.


இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது பூர்வீக ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெருவெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றக் களம் இறங்கினார். தண்ணீர் சூழப்பட்டு பல்வேறு கிராமங்கள் துண்டிக்கப்பட்டிருந்தது. அப்பகுதிகளில் உள்ள மக்களை  மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க  வைக்க உதவினார்.


அத்தோடு நிற்காமல் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டுள்ளாராம் மாரி செல்வராஜ். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான நேரத்தில் அரசு தரும் நிவாரண பொருட்களை கொண்டு போய் சேர்த்து வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொடுத்தும் வருகிறார்.


இன்னும் மீட்கப்படாத கிராமங்கள் பல இருக்கின்றன என்பதை அறியும் வகையில், ஓய்வில்லாமல் களத்தில் உதவி செய்து வருகிறார்கள் மாரி செல்வராஜ் குழுவினர்.


தூத்துக்குடி,நெல்லை, ஸ்ரீவைகுண்டம் ,சுற்று வட்டார பகுதிகளில் இயக்குனர் மாரி செல்வராஜ் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்த போது, அவரது கோரிக்கையின் பேரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு வந்தார்.  இவர்களுடைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானபோது சிலர் அதற்கு கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். சர்ச்சையைக் கிளப்பினர்.


இதற்கு மாரி செல்வராஜ் தனது பாணியில் பதிலளித்திருந்தார். நடிகர் வடிவேலுவும் இதுகுறித்துக் கூறுகையில், அது அவர் ஊரு. மேடு பள்ளம் எங்கு இருக்கும் என்பது அவருக்குத் தான் தெரியும். அவர் ஊரில் வெள்ளம் வந்தால் அவர் போகக்கூடாதா..  தப்புத் தப்பா பேசறாங்களே என்று ஆதங்கம் வெளியிட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.