தயாரிப்பாளர் பா. ரஞ்சித்.. ஹீரோ துருவ் விக்ரம்.. புதுப் படத்திற்கு ரெடியானார் மாரி செல்வராஜ்!

Manjula Devi
Mar 13, 2024,10:38 AM IST

சென்னை: இயக்குநர் பா ரஞ்சித்தின் கூட்டணியில் எனது ஐந்தாவது படத்தை இயக்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.


நடிகர் வடிவேலு - உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நடித்த மாமன்னன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் புது படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இவர் இயக்குனர் ராமிடம் 10 வருடமாக உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். பின்னர் பத்திரிக்கையில் சில காலம் பணி புரிந்தவர். 


ஆனந்த விகடனில் மறக்க நினைக்கிறேன் என்ற தொடரையும் எழுதியவர். 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் இயக்குனர் மாரி செல்வராஜ். இப்படம்  மிகப்பெரிய வரவேற்பு பெற்று அனைவரிடமும் பாராட்டைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் பிரபலமாக பேசப்பட்டது.  உதயநிதி ஸ்டாலின் - வடிவேலு நடிப்பில் வெளியான மாமன்னம் படம் மிகப் பிரபலமானது, பெரும் வரவேற்பைப் பெற்றது. 




தற்போது வாழை என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியிட தயார் நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு நெல்லை மற்றும் தூத்துக்குடியை புரட்டிப்போட்ட கன மழையால் பாதிக்கப்பட்ட  பகுதிகளில் மீட்பு படையினருக்கு உதவியாக இருந்து, மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டவர் இயக்குனர் மாரி செல்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் புதிய படத்திற்குத் தயாராகி விட்டார் மாரி செல்வராஜ். சியான் விக்ரமின் மகனும், நடிகருமான  துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பிரேமம் பட நாயகி அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பலர் நடிக்க உள்ளன இப்படத்தை அப்ளாஸ் என்டர்டெய்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து  வழங்க, இப்படத்தை பா ரஞ்சித் தயாரிக்கிறார்.


கபடி விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாக உள்ளது. அனைத்து தரப்பிலும் விதிகள் சூழ்ந்த இந்த உலகத்தில் துணிச்சலையும் தைரியத்தையும் வாழ்க்கையாக கொண்ட இளைஞனின் கதையை சொல்லுமாம் இந்த புதிய திரைப்படம். மேலும் இப்படத்தின் கதையை ஒரு மனிதன் விளையாட்டை துப்பாக்கி போன்ற வலிமைமிக்க ஆயுதமாக ஏந்தி வன்முறையற்ற அமைதியான வாழ்க்கையை வாழ்வதற்காக போராடும்  போராட்டத்தை இப்படம் விவரிக்குமாம்.


இப்படம் பற்றி இயக்குனர் மாரி செல்வராஜ் கூறுகையில்,


பரியேறும் பெருமாள்- பா ரஞ்சித் அண்ணாவுடன் நான் இணைந்த முதல் திரைப்படம். இப்படம் இவ்வளவு உயரம் எட்டியதற்கு பா. ரஞ்சித்தும் ஒரு முக்கிய காரணம். என்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கு அது ஒரு படிக்கல்லாக அமைந்தது. அவருடன் மீண்டும் ஒரு முறை இணைந்து பணியாற்றுவது உற்சாகத்தை அளிக்கிறது. 


இப்போது என்னுடைய ஐந்தாவது படத்திற்காக அவருடனும், மற்றொரு வலிமையான கூட்டாளியான அப்ளாஸ் என்டர்டெய்ன்மெண்ட்டுடனும் இணைந்திருக்கிறேன். மீண்டும் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அதிதி ஆனந்த் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. பரியேறும் பெருமாள் முதல் என்னுடைய அனைத்து படைப்புகளையும் அதிதி ஆனந்த் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். அவர் ஒரு நல்ல தோழியும் கூட. மேலும் அவருடைய உள்ளார்ந்த ஆதரவுடன் இந்தத் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். 


இந்த திரைப்படம் கபடி என்னும் விளையாட்டின் வேர்களைத் தேடிச் செல்லும் ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இருக்கும். மேலும் துருவுடன் இணைந்து பணியாற்றுவது என்பதும் மகிழ்ச்சி. இந்தத் திரைப்படத்தில் வலிமையாகவும்.. திறமையான இளைஞனாகவும் துருவ் விக்ரம் வித்தியாசமான கோணத்தில் திரையில் தோன்றுவார். இந்த திரைப்படம் நம் அனைவருக்கும் ஒரு முக்கியமான மைல் கல்லாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என கூறினார்.