சொந்த ஊர் மக்களுக்காக.. விடிய விடிய மீட்புப் பணியில் ஈடுபட்ட.. இயக்குனர் மாரிசெல்வராஜ்

Meenakshi
Dec 19, 2023,12:24 PM IST

தூத்துக்குடி: தன் சொந்த ஊர் மக்களுக்காக  ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டார பகுதிகளில் விடிய விடிய மீட்பு பணிகளில் ஈடுபட்டு நூற்றுக்கணக்கான மக்களை காப்பாற்றியுள்ளார் இயக்குனர் மாரிசெல்வராஜ்.


திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கன மழை பெய்து மக்களை உலுக்கி விட்டது. இந்தப் பகுதிகளில் மீட்புப் பணிகள் தற்போது வேகம் பிடித்துள்ளன.  பொதுமக்களுக்கு  தேவையான உதவிகளை உடனடியாக வழங்கிட தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. நெல்லையும், தூத்துக்குடியும் இன்னும் வெள்ள நீரில் மிதக்கின்றன. 


இப்படி ஒரு பெரு வெள்ள பாதிப்பை யாரும் எதிர்பார்க்கவில்லை. இதை பார்த்த இயக்குனர் மாரிசெல்வராஜ் நேற்று தனது மன வேதனையை அறிக்கையாக வெளியிட்டிருந்தார். அதில்,  வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. 




மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை . வெள்ளத்தின்  வேகம் அப்படியிருக்கிறது. இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.


இந்த நிலையில், தன் சொந்த மாவட்டமான தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், சுற்று வட்டார பகுதிகளில் விடிய விடிய மீட்பு பணிகளில் ஈடுபட்டு நூற்றுக்கணக்கான மக்களை காப்பாற்றியுள்ளார்  இயக்குனர் மாரிசெல்வராஜ். அறிக்கையை மட்டும் வெளியிட்டு விட்டு சும்மா இருக்காமல் கலத்தில் இறங்கி உதவி செய்த இயக்குனர் மாரிசெல்வராஜுக்கு ஒரு சல்யூட் செய்யலாம். 




இது மட்டுமில்லிங்க, 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போதும் கூட, தன் சொந்த கிராமத்திற்கு சென்று அரிசி, மளிகை பொருட்களின் தொகுப்பை அவரே வீடுவீடாக சென்று  வழங்கியவர் மாரி செல்வராஜ். சின்ன ரோல் கிடைச்சு நாலஞ்சு படத்துல தலை காட்டிட்டா சொந்த ஊரை மறந்து விடும் இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதாரா என்று ஆச்சிரியப்பட வைத்துள்ளார் மாரி செல்வராஜ்.