அமீரை இழிவுபடுத்தியது என்னை அவமானப்படுத்தியதற்கு சமம்.. பாரதிராஜா கடும் கண்டனம்

Su.tha Arivalagan
Nov 28, 2023,06:25 PM IST

சென்னை: இயக்குநர் அமீருக்கு ஆதரவாக மூத்த இயக்குநர் பாரதிராஜாவும் களம் குதித்திருப்பதால் பிரச்சினை சூடு பிடித்துள்ளது.


இயக்குநர் அமீர் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அளித்த பேட்டி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஞானவேல்ராஜாவுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பல்வேறு இயக்குநர்கள் ஏற்கனவே கண்டனம் தெரிவித்த நிலையில் இதுவரை தயாரிப்பாளர் சங்கம் வாயே திறக்காமல் மெளனம் காத்து வருகிறது. அதேபோல பருத்தி வீரன் படம் தொடர்பான நடிகர் கார்த்தியோ, சூர்யாவோ, அவர்களது தந்தையான சிவக்குமாரோ கூட எதுவும் பேசாமல் உள்ளனர்.


இந்த நிலையில் மூத்த இயக்குநர் பாரதிராஜா, ஞானவேல்ராஜாவைக் கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். அந்த அறிக்கையில் பாரதிராஜா கூறியிருப்பதாவது:




ஞானவேல் அவர்களே, உங்களுடைய காணொளியை பார்க்க நேரிட்டது. பருத்திவீரன் திரைப்படம் சார்ந்து உங்களுக்குள் இருப்பது பொருளாதாரப் பிரச்சினை சார்ந்தது மட்டுமே. ஆனால் நீங்கள் தந்த பேட்டியில் மிகச்சிறந்த படைப்பாளியின் புகழுக்கும் பெயருக்கும் படைப்பிற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.


உங்களை திரைத்துறையில் அடையாளப்படுத்தி மிகப்பெரும் தயாரிப்பாளராக உருவாக்கியதில் திரு அமீரின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதை மறந்துவிட வேண்டாம். பருத்திவீரன் திரைப்படத்திற்கு முன்பு அமீர் ரெண்டு படம் இயக்கி அதில் ஒன்றை தயாரித்தும் இருக்கிறார். அவர் உங்கள் படத்தில் தான் வேலை கற்றுக் கொண்டார் என்பதை எக்காளமாக கூறி வன்மமாக சிரிப்பது என் போன்ற படைப்பாளிகளையும் அவமதிக்கும் செயலாகும்.


ஏனென்றால் உண்மையான படைப்பாளிகள் சாகும் வரை கற்றுக் கொண்டே தான் இருப்பார்கள். நான் இப்போதும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். மிகச் சிறந்த படைப்பாளியின் படைப்புகளையும் அவர் நேர்மையும் இழிவு படுத்தியதற்காக வருத்தம் தெரிவித்து பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்ப்பது சரியாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் பாரதிராஜா.