இந்தப் பக்கம் சிவகார்த்திகேயனுடன்.. அந்தப் பக்கம்..சல்மான் கானுடன்..அதிரடி காட்டும் ஏ.ஆர்.முருகதாஸ்

Meenakshi
Mar 12, 2024,04:49 PM IST

சென்னை: தமிழில் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கி வரும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், மறுபக்கம் இந்தியிலும் ஒரு கை பார்க்க களம் இறங்கியுள்ளார். தனது புதிய படத்திற்காக சல்மான் கானுடன் இணைய உள்ளதாக ஏஆர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.


தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனர்களுள் ஒருவர் ஏ ஆர் முருகதாஸ். ரமணா, துப்பாக்கி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் ஆகிய படங்களை இயக்கிய இவர். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும்  எஸ் கே 23 படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகி உள்ளது. படத்தில் போலீஸ் அதிகாரியாக சிவகார்த்திகேயன் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.


இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகின்றது. இந்தப் படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் சல்மான்கான் முக்கிய வேடத்தில்  நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் ஏ.ஆர். முருகதாஸ். இதனை அவரே உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள குறிப்பில்,  சல்மான்கான், தயாரிப்பாளர் சஜித் நடியத்வாலா ஆகியோருடன் இணைவதில் மிகவும் உற்சாகம். அசாத்திய திறமைசாலிகளுடன் இணைவது ஒரு பாக்கியம். மறக்க முடியாத சினிமா அனுபவத்திற்கு தயாராகுங்கள்.  எங்களது படம் 2025 ஆம் ஆண்டு  ரம்ஜானில்  திரைக்கு வர உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 




ஆறு வருட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பாலிவுட் பக்கம் போகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ஏற்கனவே அமிர்கானை வைத்து கஜினி படத்தை இயக்கியவர் ஏ.ஆர். முருகதாஸ் என்பது நினைவிருக்கலாம். பாலிவுட் சூப்பர் நடிகராக பார்க்கப்படும் சல்மான்கான்  ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியால் இப்படம் குறித்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்படைந்துள்ளனர். இந்தப் படத்தை சஜித் நாடியத்வாலா தயாரிக்கவுள்ளார். இந்த படத்தின் முதல் கட்ட சூட்டிங் மே மாதம் தொடங்க உள்ளதாக தெரிகிறது.


இந்த படத்தில் ஆக்சனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கதைக்களம் உருவாக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது. இந்த படம் ரூ.400 கோடியில் உருவாக உள்ளதாகவும், போர்ச்சுக்கல் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த படத்தின் சூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.