சூர்யாவுக்கு நான் தான் வில்லன்...வாடிவாசல் படம் பற்றி சூப்பர் அப்டேட் கொடுத்த அமீர்

Manjula Devi
May 11, 2024,02:59 PM IST
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் அமீர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக  தனியார் நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். இதனால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் திரைப்படம் வாடிவாசல். தற்போது நடிகர் சூர்யா   மிகப் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார் . இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.  இதனையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 44வது படத்தில்  கமிட்டாகி உள்ளார். சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய தகவல் வெளியானாலும் ரசிகர்கள் ஆவலுடன் பல மாதங்களாக கேட்டுவருவது என்னவோ வாடிவாசல் அப்டேட்டை தான்.



சூர்யாவும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். மற்றொரு புறம் வெற்றிமாறனும் படுபிஸியாக இருந்து வருகிறார். விடுதலை 2 படம் முடிந்ததுமே வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் துவக்குவதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது வரை படத்தின் வேலைகள் துவங்கவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் இருந்து வந்தனர். இந்நிலையில் வாடிவாசல் பற்றிய சூப்பர் அப்டேட்டை வெளியிட்டுள்ளார் டைரக்டர் அமீர். 

 இயக்குனர் அமீர், கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா மற்றும் திரிஷா நடிப்பில் உருவான மௌனம் பேசியதே என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் ராம், மற்றும் கார்த்தி நடிப்பில் பருத்திவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இப்படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று  தமிழ் சினிமாவின் உச்ச இயக்குனராக வலம் வந்தவர்.ஒரு இயக்குனராக மட்டுமில்லாமல் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த யோகி படத்தில் நாயகனாகவும், ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார் அமீர். வெற்றிமாறன் இயக்கத்தில் அமீர் நடித்த வடசென்னை படத்தில்,  ராஜன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஒரு நல்ல நடிகர் என்றும் பெயர் பெற்றார். இவர் டீம் ஒர்க் புரொடக்சன் ஹவுஸ் என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் அமீர் நாயகனாக நடித்த உயிர் தமிழுக்கு படம் நேற்று வெளியானது.

பிரபல இயக்குனர்களுள் ஒருவராக திகழும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த விடுதலை படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து விடுதலை பாகம் 2 படத்தை இயக்குவதில் வெற்றிமாறன் பிசியாக இருக்கிறார். இதனை முடித்துவிட்டு சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார். இதில் இயக்குனர் அமீர் மௌனம் பேசியதே படத்திற்குப் பிறகு  சூர்யாவுடன் மீண்டும் வாடிவாசல் படத்தில் இணைய போவதாக ஏற்கனவே தகவல் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இயக்குனர் அமீர் பிரபல தனியார் நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் வாடிவாசல் படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரத்தை பற்றி ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தில் முழுக்க முழுக்க ஹீரோவுடன் பயணிக்கும் வில்லன் கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யாவுடன் இணையும் நடிக்கும் தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.