மகாவிஷ்ணு.. அநீதியைத் தட்டிக்கேட்ட.. ஆசிரியர் சங்கரை.. தலைமை ஆசிரியராக்குங்க.. அமீர் கோரிக்கை

Manjula Devi
Sep 09, 2024,10:56 AM IST

சென்னை:   அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்ற நபரின் அநீதியான சர்ச்சை பேச்சை தட்டி கேட்ட ஆசிரியர் சங்கருக்கு பாராட்டு வழங்கியதோடு நில்லாமல், அப்பள்ளியின் தலைமை ஆசிரியராக நியமித்து கௌரவிக்க வேண்டும் என இயக்குனர் அமீர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


சென்னை அசோக் நகரில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாவிஷ்ணு என்பவர், முன்ஜென்மம், பாவ புண்ணியம், மறுபிறவி என மாணவர்கள் மத்தியில் மூடநம்பிக்கை குறித்து பேசிய வார்த்தைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும முன் ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள்தான் இந்தப் பிறவியில் கண் தெரியாமல் காது கேளாமல், கால் கை இல்லாமல்,  மாற்றுத் திறனாளிகளாக  பிறக்கிறார்கள், நோய் நொடிகளுடன் இருக்கிறார்கள் என மகாவிஷ்ணு கூறியது பல்வேறு தரப்பினரிடையே கடும் கோபத்தைக் கிளம்பியது. 


இதனைத் தொடர்ந்து மகா விஷ்ணு மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர் சங்க அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். பல அமைப்புகள் சார்பில் போலீஸில் புகாரும் தரப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மூடநம்பிக்கை குறித்து மகாவிஷ்ணு பேசிய வார்த்தையை தட்டி கேட்ட மாற்றுத்திறனாளி  ஆசிரியர் சங்கரை பலரும் தொடர்ந்து பாராட்டியவண்ணம் உள்ளனர்.


இந்த நிலையில்  இயக்குனர் அமீர் சங்கரை பாராட்டியதோடு மட்டும் இல்லாமல் அவருக்கு தலைமை ஆசிரியர் பதவி வழங்க வேண்டும் என முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:


சென்னை - அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பிற்போக்குத்தனமான விஷக் கருத்துகளைப் பரப்பிய மஹாவிஷ்ணுவின் செயலைக் கண்டித்ததோடு மட்டுமல்லாமல் அவரின் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியும் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கும்,  அவரது வார்த்தைக்கேற்ப உரிய நடவடிக்கையை எடுத்த தமிழக காவல்துறைக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும், நன்றியும்.




சக மனிதனை பிறப்பின் அடிப்படையில் தாழ்த்திப் பார்க்கின்ற சனாதன கருத்திற்கு எதிராக விழித்துக் கொண்டிருக்கும் தமிழினத்தை, இப்போது ஆன்மீகம் என்கிற போர்வையில்  “முற்பிறவி பாவங்கள்” என்ற சொல்லின் மூலம், வர்க்க ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் மீண்டும் ஒரு கும்பல் அடிமையாக்க  முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து தமிழக அரசு விழிப்போடு செயல்பட வேண்டிய தருணம் இது.! என்பதையே அசோக் நகர் அரசினர் மகளிர் பள்ளியின் நிகழ்வு  நம் எல்லோருக்கும் உணர்த்துகிறது. 


தங்கள் கண் முன்னே நடைபெற்ற பிற்போக்குத்தனமான, மூட நம்பிக்கையான பேச்சுக்களை தடுக்காமல், கண்டும் காணாமல் நின்று கொண்டிருந்த ஆசிரியப் பெருந்தகைகளுக்கு மத்தியில் தனது ஞானக்கண் கொண்டு  அநீதியை தட்டிக் கேட்ட மானமிகு தமிழாசிரியர் சங்கர் அவர்களுக்கு அமைச்சர் உள்ளிட்டோர் பாராட்டுக்களை வழங்கியதோடு நின்றுவிடாமல், அதே பள்ளியில் அவரைத் தலைமை ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்று மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களையும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.


மேலும்,சமூகத்தை வழி நடத்தக்கூடிய அறிவார்ந்த நாளைய தலைமுறையை உருவாக்கும் பட்டறையாக  கல்வி நிலையங்களை உருவாக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்லாது சமூகப் பொறுப்புள்ள அனைவரின் கடமை என்பதை மறந்து சமீப காலமாக தமிழ் நாட்டு கல்வி நிறுவனங்களில், INSTAGRAM, REELS போன்ற சமூக வலைத்தளங்களிலும் YOUTUBE ஊடகத்திலும் பிரபலமானவர்களையும் அழைத்து மாணவர்களிடையே உரையாடச் செய்வது அதிகரித்து வருகிறது. 


எந்த விதமான கல்வித் தகுதியோ, அறிவில் தேர்ச்சியோ, ஞான முதிர்ச்சியோ, முற்போக்குச் சிந்தனையோ இல்லாதவர்களை மாணவர்களின் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தி அவர்களை நாயகர்களாக சித்தரிப்பதும் மாணவர்களுக்கு அவர்களை அறிவுரை வழங்கச் சொல்வதும்  மிகவும் வேதனைக்குரிய விசயமாகும். 


கல்வி நிறுவனங்களில் திரைப்பட விழாக்கள் கூடாது:


அதே போல, பள்ளி கல்லூரிகளில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்கு தலைமை ஏற்க அல்லது சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள திரைக் கலைஞர்கள் பங்கு பெறுவது ஏற்புடையதாகவே இருந்தாலும், வணிக நோக்கத்திற்காக தயாரிக்கப்படும் பிரபலமானவர்களின் திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களையும் திரைப்பட அறிமுக விழாக்களையும் கல்வி நிறுவன வளாகங்களில் நடத்துவது கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு கேடு விளைவிக்கக் கூடியதே.! 


திரை அரங்கங்கள் கல்விக்கூடமாக மாற வேண்டுமே, தவிர கல்விக்கூடங்கள் திரை அரங்குகளாக மாறி விடக்கூடாது என்பதில் மக்களும், அரசும் கவனமாக இருக்க வேண்டும். எனவே, மாணவர்களின் எதிர்காலத்திற்கும் பொது சமூகத்திற்கும் எந்தவித பயனும் அளிக்காத திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை விதிக்க வேண்டும் என்பதோடு கல்வி நிறுவனங்களில் திரைக்கலைஞர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் பங்கேற்று கருத்துரை வழங்க ஒரு வரைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை நான் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார் அமீர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்