விஜய்யின் கட்சியில் சேருவீங்களா?.. அதுக்கு இயக்குநர் அமீர் அளித்த அதிரடியான பதில்!

Manjula Devi
Jul 29, 2024,06:49 PM IST

சென்னை:   தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் என்னை அழைத்தால் அக்கட்சியில் சேர தயாராக உள்ளேன் என இயக்குனரும் நடிகருமான அமீர் கூறியுள்ளார்.


நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி  தமிழக வெற்றிக் கழகம் என்ற புது கட்சியை தொடங்கினார். இக்கட்சிக்கு ரசிகர்கள் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், விஜய் ஆதரவாளர்கள், உள்ளிட்ட பலரும்  ஆதரவு தெரிவித்து அதனை கொண்டாடி மகிழ்ந்தனர்.


இது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவை சேர்ந்த பல திரை நட்சத்திரங்களும் விஜய் ஆரம்பித்த கட்சிக்கு ஆதரவளித்து வருகின்றனர். குறிப்பாக நடிகை வாணி போஜன், சத்யராஜ் மகள் திவ்யா, சீமான் உள்ளிட்ட பலரும் விஜய் ஆரம்பித்த கட்சிக்கு ஆதரவு தெரிவித்து, விஜய் மனது வைத்தால் தாங்களும் எதிர்காலத்தில் இக்கட்சியில் இணைய உள்ளதாக தெரிவித்து வந்தனர்.




அந்த வரிசையில் நடிகரும் இயக்குனருமான அமீர் சமீபத்தில் திருச்சியில் ஒரு விழாவுக்கு வருகை தந்த போது, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் என்னை அழைத்தால் அவரது கட்சியில் சேர தயாராக இருப்பதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது,  அரசியலுக்கு நிச்சயமாக வருவேன். இன்று இருக்கும் அரசியல் நெருக்கடியின் காரணமாக அரசியலுக்கும் வந்தாலும் வருவேன். எல்லோரும் அரசியலில் தான் உள்ளோம்.


திராவிடம் என்கிற சொல்லை நாம் புரிந்து கொள்ள வேண்டும். திராவிடம் என்கிற உணர்வு நமது ரத்தத்திலேயே இருக்கிறது. யாரெல்லாம் பாசிசத்திற்கும் ஆரியத்திற்கும் எதிரான கொள்கை கொண்டு செயல்படுகிறார்களோ அவர்கள் அனைவரும்  திராவிட அரசியல் செய்பவர்கள் தான் - எனவே திராவிடம் என்கிற பெயரை தாங்கிய கட்சி தான் அதனை செய்கிறார்கள் என்று அல்ல. பாசிசத்திற்கும் ஆரியத்துக்கும் எதிரானது தான் திராவிடம், அது தான் திராவிடத்தின் அடையாளம்.


தமிழகத்தைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு சரியாகத்தான் இருக்கிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தை பொறுத்தவரை சட்ட ஒழுங்கை சரி செய்து கொண்டு தான் உள்ளனர். தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் என்னை அழைத்தால் அவரது கட்சியில் சேர தயாராக உள்ளேன். விஜய் சீமான் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன்.


மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்தை  நிராகரித்திருப்பது தான் மத்திய அரசின் முகம் . நிராகரித்திருப்பது என்பது கூட பெரிதல்ல. ஆனால் அதற்கும்  மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு கொடுத்து இருக்கிறார்கள் என்பதை என்னும் போது தான் வருத்தமாக உள்ளது என கூறியுள்ளார்.