சில ஆவணங்களை ஈடி கைப்பற்றியுள்ளது.. ஆனால் அது என்னான்னு தெரியாது.. இயக்குநர் அமீர்

Meenakshi
Apr 10, 2024,12:42 PM IST

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் இயக்குனர் அமீர் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் ஈடி ரெய்டின்போது சில ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகவும், ஆனால் அது என்ன என்று எனக்குத் தெரியாது என்றும் தெரிவித்தார்.


முஸ்லிம்களின் புனித மாதமாக ரமதான் மாதம் கொண்டாடப்படுகிறது. இந்த மாதம் முழுவம் முஸ்லிம்கள் நோன்பு  இருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். தமிழ்நாட்டில் நேற்று பிறை தெரியவில்லை. இதனால் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இருப்பினும் கோவை, மதுரையில் இன்றே ரம்ஜானைக் கொண்டாடி மகிழ்ந்தனர். ரம்ஜானையொட்டி சிறப்புத் தொழுகையில் முஸ்லீம்கள் ஈடுபட்டனர். மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் இயக்குனர் அமீர் கலந்து கொண்டு தொழுகை செய்தார். தொழுகைக்கு பின்னர் இஸ்லாமிய மக்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி, கை கொடுத்தும் ரம்ஜான் வாழ்த்துக்கள் கூறி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.




ரூபாய் 2000 கோடி போதைப் பொருள் கடத்தப்பட்ட வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்  உட்பட ஐந்து பேரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அதனை தொடர்ந்து நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜாபர் சாதி தொடர்புடைய சுமார் 35 இடங்களில் இந்த வழக்கு தொடர்பாக அதிரடியாக சோதனை மேற்கொண்டு வந்தனர்.


அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு - அமீர்


இதில் சென்னை சாந்தோம் பகுதி உள்ள ஜாபர் சாதிக் இல்லத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கு உடன் தொடர்பில் இருந்ததாக இயக்குனர் அமீரின் வீடு மற்றும் தியாகராய நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதுகுறித்து செய்தியாளர்கள் அமீரிடம் கேட்டபோது, அமலாக்கத்துறை அதிகாரிகள் சில ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். அது என்ன என்று எனக்குத் தெரியாது. அவர்கள்தான் அதைச் சொல்ல வேண்டும்.


என் மீதான குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நிருபிப்பேன், விரைவில் இது குறித்து ஒருநாள் பேசுவேன். நான் இப்போதும் சொல்கிறேன், எந்த விசாரணைக்கும் நான் தயார். அமலாக்கத்துறை விசாரணைக்கு அழுத்தம் இருக்கிறதா? இல்லையா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை என்று கூறினார் அமீர்.