இந்தா பிடிங்க ரூ. 5 லட்சம்.. இயக்குனர் சங்க வாரிசுகளுக்கு உதவ..நிதி உதவி அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Manjula Devi
Sep 14, 2024,01:30 PM IST

சென்னை:   இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒவ்வொரு வருடமும் இயக்குனர் சங்கத்திற்கு நிதி உதவி அளிப்பதாக கூறியிருந்த நிலையில் தற்போது இயக்குனர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவிக்காக, ரூ. 5 லட்சம் உதவித்தொகையை அளித்துள்ளார்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷின் மனைவியாவார். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். அதேபோல் 2003 ஆம் ஆண்டு வெளியான விசில் திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து பாடிய பாடலின் மூலம் பின்னணிப் பாடகராகவும் அறிமுகமானவர். கார்த்தி நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியதுடன் அப்படத்தில் இடம் பெற்ற உன் மேலஆசைதான் பாடலை, கணவர் தனுஷுடன் இணைந்து பாடியவர். 




இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனர் சங்கத்திற்கு வருடா வருடம் 10 லட்சம் நிதி உதவி அளிப்பதாக ஏற்கனவே உறுதி அளித்திருந்தார். அதன்படி இயக்குனர்கள், உதவி இயக்குனர்களின் வாரிசுகளுக்கு 10 லட்சம் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். அதில் முதற்கட்டமாக 5 லட்சத்தை இயக்குனர் சங்கத் தலைவர் ஆர் வி உதயகுமாரிடம் வழங்கினார்‌. இந்த பணத்தை இயக்குநர்கள் சங்க செயலாளர் பேரரசு, பொருளாளர் சேரன், பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி ஆகியோர் இணைந்து பெற்று கொண்டனர்.


நிகழ்ச்சியில் நிர்வாகிகள், இயக்குனர்கள் எழில், ஸ்ரீ ரங்கநாதன், மித்ரன் ஜவகர், எஸ்.ஆர் பிரபாகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு ஐஸ்வர்யாவிற்கு நன்றி தெரிவித்தனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்