"மிஸ்டர் சந்திரமெளலி" புகழ் ரா. சங்கரன் காலமானார்.. குருவின் மறைவிற்கு பாரதிராஜா இரங்கல்

Aadmika
Dec 14, 2023,01:00 PM IST

சென்னை : பழம்பெரும் டைரக்டரும், நடிகருமான ரா.சங்கரன் இன்று (டிசம்பர் 14) காலை காலமானார். அவருக்கு வயது 92. இவரது மறைவிற்கு டைரக்டர் பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


தமிழ் சினிமாவிற்கு டைரக்டர் சங்கரனை தெரியாமல் இருக்கலாம். ஆனால் நடிகர் சங்கரனை யாராலும் மறக்க முடியாது. அப்பாவியான,  சாந்தமான, தெய்வீக தன்மையுடன் இருக்கும் அவரது முகத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. எத்தனையோ படங்களில் அப்பா வேடத்தில், தாத்தா வேடத்தில் அசத்தலான நடிப்பைக் கொடுத்தவர்தான் ரா. சங்கரன்.


குறிப்பாக மெளன ராகம் படத்தில் நடிகர் கார்த்திக்கால் "மிஸ்டர் சந்திரமெளலி" என கூப்பிடப்பட்டு மிகப் பிரபலமானவர். அந்தப் படத்தில் ரேவதியின் அப்பா கேரக்டரில் நடித்தவர் தான் சங்கரன். இந்த டயலாக் மட்டுமல்ல டைரக்டர் சங்கரனும் பிரபலம் தான். பல படங்களில் நீதிபதியாக, ஹீரோயினின் தந்தையாக நடித்து, தனது நடிப்பு திறமையால் ரசிகர்கள் மனதில் இடும் பிடித்தவர் தான் சங்கரன்.




விஜயகாந்த் சின்னக் கவுண்டர் படத்தில் இவர் சிறிய வேடத்தில் வந்து போயிருப்பார். ஆனால் இன்று வரை அந்த கேரக்டரும் நினைவு கூறப்படுகிறது. அந்த அளவுக்கு தனது கேரக்டராகவே மாறி விடுபவர் சங்கரன். 


சங்கரன், 1974 ல் ஒன்னே ஒன்று கண்ணே கண்ணு படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானவர். தொடர்ந்து தேன் சிந்துதே வானம், துர்கா தேவி, தூண்டில் மீன், வேலும் மயிலும் துணை உள்ளிட்ட சில படங்களை இயக்கி உள்ளார். அது மட்டுமல்ல பாரதிராஜா உள்ளிட்ட பல டைரக்டர்கள் ஆரம்ப காலத்தில் இவரிடம் தான் அசிஸ்டென்டாக பணியாற்றி உள்ளார். இவர் இயக்கிய படங்கள் கொஞ்சம் தான் என்றாலும், நடித்த படங்கள் ஏராளம். 


1977 ல் பெருமைக்குரியவர்கள் என்ற படத்தை இயக்கி, அதன் மூலம் நடிகராகவும் அறிமுகமானார் சங்கரன். பிறகு புதுமைப் பெண், ஒரு கைதியின் டைரி, பகல் நிலவு, மெளன ராகம், உனக்காகவே வாழ்கிறேன், மக்கள் என் பக்கம், நியாய தராசு, ஆடி வெள்ளி, பொண்டாட்டி தேவை, தாயம்மா, அமரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். வயது முதிர்வின் காரணமாக 1999 ம் ஆண்டு அழகர்சாமி என்ற படத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் ஓய்வில் இருந்து வந்தார் சங்கரன். இவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.


எனது ஆசிரியருக்கு இரங்கல்.. பாரரதிராஜா இரங்கல்


இவரது மறைவிற்கு தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார் டைரக்டர் பாரதிராஜா. அதில் அவர், எனது ஆசிரியர் இயக்குனர் திரு.ரா.சங்கரன் சார் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

டைரக்டர் சங்கரனின் மறைவிற்கு நடிகர் சங்கமும் இரங்கல் தெரிவித்துள்ளது.