இயக்குனர்  நடிகை தயாரிப்பாளர் ஜெயதேவி மறைந்தார்!

Su.tha Arivalagan
Oct 04, 2023,12:15 PM IST
சென்னை: பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான ஜெயதேவி இன்று அதிகாலை காலமானார்.

நடிகையாக அறிமுகமாகி, பின்னர் இயக்குநராக, தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தவர் ஜெயதேவி. பல வெற்றிப் படங்களை இயக்கியும், தயாரித்தும் உள்ளார்.  62 வயதான ஜெயதேவி, சென்னை போரூர் சமயபுரம் நகரில் வசித்து வந்தார்.





இவர் கேமராமேன் - இயக்குநர் வேலு பிரபாகரனின் முதல் மனைவி ஆவார். வேலு பிரபாகரன் நடித்த புரட்சிக்காரன் என்ற படத்திற்கு கதை, வசனம் எழுதியுள்ளார். ஜெயதேவி 1960 இல் நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கினார். 80களில் வெளியான வாழ நினைத்தால் வாழலாம், வா இந்த பக்கம், ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது  போன்ற படங்களை தயாரித்தவர் ஜெயதேவி. 

இவர் தான் இயக்கிய படங்களில் மட்டுமே நடித்தவர். வெளிப்படங்களில் நடித்ததில்லை. நூற்றுக்கணக்கான முறை மேடையேறி ஏராளமான நாடகங்களையும், நடன நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றி உள்ளார். நடிக்க ஆரம்பித்த பிறகு நடிப்பதுடன் மட்டுமல்லாமல் தொழில்நுட்பங்களை கற்பதிலும் ஆர்வம் காட்டினார். ஆண் இக்குநர்களே கோலோச்சி வந்த சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டவர்.



சில ஆண்டு காலமாக சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜெயதேவி பின்னர் நடிகை குஷ்புவை வைத்து பவர் ஆஃப் உமன் என்ற படத்தை இயக்கினார். இப்படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான தமிழக அரசின் விருது கிடைத்தது.

ஜெயதேவியை விட்டுப் பிரிந்த பின்னர் இயக்குநர் வேலு பிரபாகரன், தன்னை விட பாதி வயதே கொண்ட நடிகை ஷெர்லியை மணந்து கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.