பெரியார் படத்தில்.. ராஜாஜியாக நடித்த.. இயக்குநர் ஆர்த்தி குமார் காலமானார்!

Manjula Devi
Feb 06, 2024,03:10 PM IST

சென்னை: பிரபல இயக்குனரும் நடிகருமான ஆர்த்தி குமார் (சுரேஷ்குமார்) உடல் நலக்குறைவால் காலமானார். 

நெல்லை வண்ணாரப் பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் திரைத்துறைக்கு வந்த பின்னரே சுரேஷ்குமார் என்ற இயற்பெயரை ஆர்த்திக் குமார் என மாற்றிக் கொண்டார். கடந்த 2007 ஆம் ஆண்டு ஞானசேகரன் இயக்கிய பெரியார் படத்தில் ராஜாஜியாக நடித்தவர் ஆர்த்தி குமார்.




தமிழ் திரையுலகில்  சவுண்ட் பார்ட்டி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் ஆர்த்தி குமார் . 

இப்படத்தின் நகைச்சுவையின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர். இப்படத்தில் "குமரேசா எங்க போற.. எங்கய்யா போற".. என்ற வடிவேலின் நகைச்சுவை காட்சிகள் படத்தின் பிளஸ் பாயிண்ட் என்றே சொல்லலாம். நகைச்சுவை கலந்த இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.




இந்நிலையில் காமெடி படங்கள் மூலம் ட்ரெண்டான ஆர்த்தி குமார் நேற்று முன்தினம் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் பாளையங்கோட்டை ஹை கிரவுண்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இதனை அடுத்து நேற்று இரவு போஸ்ட்மார்ட்டம் முடிந்து, அவரது உடல் இன்று சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.


இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.  திரை பிரபலங்கள், குடும்பத்தினர்கள் என பலரும் அஞ்சலி செலுத்த உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே திரைத் துறையை சேர்ந்த பல பிரபலங்கள் உயிரிழந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது  இயக்குனர் ஆர்த்தி குமாரின் இறப்பு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.