சென்னையிலிருந்து அயோத்திக்கு.. நேரடி விமான சேவை.. இன்று முதல் தொடங்கியது!

Meenakshi
Feb 01, 2024,05:08 PM IST

சென்னை: சென்னை- அயோத்தி இடையே நேரடி விமான சேவையை இன்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தொடங்கி வைத்தார்.


உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில், பிரமாண்டமாக ராமர்கோவில் கட்டப்பட்டு பிரதமர் மோடி தலைமையில் கடந்த 22ம் தேதி திறப்பு விழா நடத்தப்பட்டது. ரூ. 2000 கோடி மதிப்பில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் 2.7 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. குழந்தை ராமருக்கு மோடி முதல் பூஜை செய்தார். இந்திய அளவில் நடிகர் ரஜினிகாந்த், அமிர்தாபச்சன், சச்சின், முகேஷ்  அம்பானி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு ராமரின் ஆசி பெற்றனர். 


இதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அயோத்தி வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக தென் இந்தியாவில் இருந்து அயோத்தி வரும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக, சென்னையில் இருந்து பிப்ரவரி 1ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கியுள்ளது. 




அதன்படி ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சென்னை டூ அயோத்தி, அயோத்தி டூ சென்னை இடையில் நேரடி விமான சேவையை தொடங்கியுள்ளது. சென்னை டூ அயோத்தி இடையேயான தினசரி விமான சேவையை மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று தொடங்கி வைத்தார்.


சென்னையிலிருந்து அயோத்திக்கு பகல் 12.45 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 03.15 மணியளவில் அயோத்தியை சென்றடையும். அதே விமானம் மறுமார்க்கமாக மாலை  4 மணிக்கு  அயோத்தியில் இருந்து புறப்பட்டு மாலை 6:20 மணிக்கு சென்னையை வந்தடையும். இந்த விமானம் போயிங் 737-8 வகை விமானம் என்பதால் ஒரே நேரத்தில் 180 க்கு மேற்பட்ட பயணிகள் பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த விமானத்தில் பயணிக்க டிக்கெட் கட்டணம் ரூ. .6499 ஆகும். ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு அந்த நகரில் புதிய விமான நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மும்பை, பெங்களூரு, அகமதாபாத், ஜெய்பூர், பாட்னா, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும் அயோத்தியிலிருந்து நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.