நான் சோர்ந்து போய் விடாமல் என்னை தாங்கிப் பிடித்த அனைவருக்கும் நன்றி.. இயக்குநர் அமீர் உருக்கம்

Su.tha Arivalagan
Dec 13, 2023,06:12 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: இயக்குனராக எனக்கு அடையாளத்தைப் பெற்றுத் தந்த என்னுடைய முதல் திரைப்படம் மௌனம் பேசியதே வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்த நெகழ்வான தருணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் என இயக்குனர் அமீர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் தன்னை சோர்ந்து போய் விடாமல் ஆறுதலும், ஆதரவும் தந்து தன்னைத் தாங்கிப் பிடித்த தமிழ்நாட்டு மக்களுக்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.


இயநக்குநர் அமீர் அறிமுகமான முதல் படம் மெளனம் பேசியதே. இந்தப் படம் வெளியாகி தற்போது 21 வருடங்களாகிறது. இதையொட்டி அமீர் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


கடந்த ஒரு மாதத்திற்கு முன் என்னை வீழ்த்துவதற்காக அவதூறுகளையும், அவமானங்களையும் பொதுவெளியில் எனக்கு சிலர் அன்பளிப்பாக கொடுத்தபோது நான் சோர்ந்து விடாமலும் துவண்டு விழாமலும் பார்த்துக் கொள்ளும் விதமாக எனக்குத் தன்னம்பிக்கையையும், அன்பையும், ஆதரவையும், எதிர்பாராத அளவிற்கு எனக்களித்த தமிழக ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஊக்க ஊடகத்துறையினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.




ஒரு இயக்குனராக எனக்கு அடையாளத்தைப் பெற்றுத் தந்து என்னுடைய  முதல் திரைப்படம் மௌனம் பேசியதே வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இந்த நெகிழ்வான தருணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 


சென்னையை நோக்கி- சினிமாவை நோக்கி படையெடுத்து வந்த எல்லோரது கனவும் நனவானது இல்லை. அப்படி கனவுகளை சுமந்து கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவனாக இருந்த என்னை கரம்பிடித்து உயர்த்தி என்னுடைய திரை கனவை நினைவாக்கிய மௌனம் பேசியதே திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் கணேஷ் ரகு மற்றும் வெங்கி நாராயணன் உள்ளிட்ட அபராஜித் பிலிம்ஸ் நிறுவனத்தாருக்கும், என்னோடு பயணித்து திரைப்படத்தின் வெற்றிக்கு கரம் கொடுத்த  சூர்யா, த்ரிஷா, லைலா உள்ளிட்ட நடிகர்- நடிகைகளுக்கும், ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைத்துறை தொழிலாளர்களுக்கும் என் நன்றிகள்.!


என்னுடைய திரைப் பயணம் தொடங்கிய இந்த 21 ஆண்டுகளில், நான் இயக்கிய படங்கள் குறைவாக இருந்தாலும் இன்னும் என்னை மனதில் நிறுத்தி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில், ஊடகங்களில், ஆதரவு தந்து கொண்டிருக்கின்ற திரை ரசிகர்களுக்கும் ஊடகப் பத்திரிகை நண்பர்களுக்கும், தமிழக மக்களுக்கும் குறிப்பாக மௌனம் பேசியதே ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என்று கூறியுள்ளார் அமீர்.


பிரமிக்க வைத்த மெளனம் பேசியதே


2002 ஆம் ஆண்டு வெளிவந்த மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் அமீர். இதில் நடிகர் சூர்யா நாயகனாகவும், திரிஷா லைலா மற்றும் நந்தா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை அபராஜித் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை  ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.


இப்படம் முழுவதும் நடிகர் சூர்யாவின் கேரக்டர் அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். கல்லுக்குள் ஈரம் என்பது போல் காதலையே வெறுக்கும் சூர்யாவின் மனதிலும் காதல் உண்டு என்பதை அழகான கதைகளத்தில் இயக்குனர் அமீர் இயக்கி இருப்பார். இந்த காதல் கதை கூட ஒரு அழகுதான். காதலையே வெறுக்கும் சூர்யாவின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.


கதையின் நகர்வுகளில் நகைச்சுவையோடு கலந்த வசனங்கள் அருமையாக இருக்கும். இதில் உள்ள பாடல் வரிகளை சொல்லவே வேண்டாம் அந்த அளவுக்கு 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தமான பாடல்கள். 

குறிப்பாக ஆடாத ஆட்டமெல்லாம்.. அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு.. இந்த இரண்டு பாடல்களின் வரிகளும் வாழ்க்கையின் எதார்த்தத்தை அழகாக பிரதிபலித்திருக்கும். இந்த அழகான காதல் கதை 21 ஆண்டுகள் பிறகு மீண்டும் இன்று நம் நினைவுக்கு வந்துள்ளது.