ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவோம்..  "அய்யய்யோ".. திண்டுக்கல் சீனிவாசனால் பரபரப்பு!

Su.tha Arivalagan
Jul 20, 2023,03:55 PM IST
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த  அதிமுக ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழக்கம் போல "ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவோம்" என்று உளறிக் கொட்டியதால் கூட்டத்தில் டென்ஷன் ஆனார்கள். 

என்ன ஒரு விசேஷம்னா வழக்கமாக இவரது பேச்சைக் கேட்பவர்கள்தான் ஜெர்க் ஆவார்கள். ஆனால் இந்த முறை "அய்யய்யோ" என்று திண்டுக்கல் சீனிவாசனே பதறிப் போய் விட்டார்!



தமிழ்நாடு முழுவதும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாத திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல்சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்ட இந்த ஆரப்பாட்டத்தின்போது திண்டுக்கல் சீனிவாசன்தான் ஹைலைட்டான பேச்சைக் கொடுத்தார்.

அவர் பேசும்போது,  "அரசியல் ஆண்மை ஸ்டாலினுக்கு இருக்குமானால் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வைத்து ஸ்டாலினை மீண்டும் முதலவராக்குவோம்" என்று அவர் கூறியபோது அக்கம் பக்கத்தில் இருந்தோர் அப்படியே ஸ்டன் ஆகி விட்டனர். அதிலும் வேடந்தூர் எம்எல்ஏ விபிபி பரமசிவம் அப்படியே நாக்கைக் கடித்து கண்ணை மூடி அய்யோ என்று வாய்க்குள் புலம்பியதைத் துல்லியமாக காண முடிந்தது. 

விட்டால் திண்டுக்கல் சீனிவாசன் என்னவெல்லாம் பேசி வைப்பாரோ என்று பயந்து போன பக்கத்தில் இருந்த முன்னாள் எம்எல்ஏ மருதுராஜ், திண்டுக்கல் சீனிவாசன் காதில், அண்ணே எடப்பாடி பழனிச்சாமி பெயருக்குப் பதில் ஸ்டாலின் பெயரைச் சொல்லிட்டீங்க என்று எடுத்துக் கொடுத்து திருத்தினார். அதைக் கேட்ட திண்டுக்கல் சீனிவாசன், "அய்யய்யோ" என்று பதறிக் கொண்டே,  இல்லல்ல வார்த்தை தப்பா வந்துருச்சு.. ஸ்டாலினை தோற்கடித்து மாண்புமிகு எடப்பாடியாரை முதல்வராக்கிக் காட்டுவோம் என்று திருத்திப் பேசினார் திண்டுக்கல் சீனிவாசன்.

திண்டுக்கல் சீனிவாசன் இப்படி தடுமாறிப் பேசுவது இது முதல் முறையல்ல. அவர் பேசும் பேச்சுக்களில் பலவும் இப்படி குளறுபடியாகிப் போயுள்ளதை கடந்த காலங்களில் நிறையவே பார்த்துள்ளோம். இந்த முறை திண்டுக்கல் சீனிவாசன் தப்பாகப் பேசும்போது அருகில் இருந்தவர்கள் அதை உடனடியாக தடுக்கவில்லை.. குறிப்பாக நத்தம் சீனிவாசன் ஜாலியாக சிரித்தபடியே நின்றிருந்தார். தப்பா பேசிட்டீங்க என்று சுட்டிக் கூட காட்டவில்லை என்பது உபரித் தகவல்!