கார் விபத்தில் சிக்கினாரா யோகிபாபு?.. நான் நல்லாருக்கேன்.. இது பொய் செய்தி.. டிவீட்டால் குழப்பம்!
ராணிப்பேட்டை: நடிகர் யோகிபாபு பயணித்த கார் இன்று அதிகாலையில் விபத்தில் சிக்கியதாகவும், அதில் அவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பியதாகவும் செய்திகள் வெளியான நிலையில் தான் நலமுடன் இருப்பதாகவும், இது பொய்ச் செய்தி என்றும் நடிகர் யோகிபாபு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணியில் இருந்து வரும் காமெடி நடிகர் யோகிபாபு மட்டுமே. மற்ற காமெடியன்கள் அனைவருமே ஹீரோக்களாகி விட்டதால் யோகிபாபு மட்டுமே காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். அத்தோடு, கதை நாயகனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
பிசியான நடிகராக வலம் வரும் யோகிபாபு இன்று காலை தனது காரில் பெங்களூரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியதாக செய்திகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதாவது, வாலாஜாபேட்டை டோல்கேட் அருகே அதிகாலை 3 மணியளவில் யோகிபாபுவின் கார் வந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையின் தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக, டிரைவர், நடிகர் யோகிபாபு ஆகியோர் காயமின்றி தப்பினர்.
உடனடியாக வேறு கார் வரவழைக்கப்பட்டு அந்தக் காரில் ஏறி யோகிபாபு புறப்பட்டுச் சென்றார் என்று அந்த செய்திகளில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் யோகிபாபு தனது எக்ஸ் தளத்தில் காலை 10.02 மணிக்கு ஒரு பதிவைப் போட்டுள்ளார். அதில், I am fine all, This is false news என்று கூறியுள்ளார் யோகிபாபு. இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.