கனமழையிலும் சூப்பர் "பவர்".. புகார்களுக்கு டயல் பண்ணுங்க "9498794987" .. அமைச்சர் தங்கம் தென்னரசு

Meenakshi
Dec 01, 2023,05:14 PM IST

சென்னை: சென்னையில்  மிக கனமழையிலும் தடையற்ற மற்றும் சீரான  மின்சாரம் வழங்கப்பட்டது. பொதுமக்கள் மின்தடை சம்பந்தமான புகார்களை 94987 94987 வாயிலாக ஒரே நேரத்தில் 65 புகார்களை பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு.


சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி விட்டது. அடுத்து புயல் வருகிறது. இதன் காரணமாக டிசம்பர் 4ம் தேதி சென்னையில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பல்வேறு வைகையில் முயற்சி செய்து முன்பு எப்போது இல்லாத அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகிறது.


வந்த மழைக்கு தேவையானவை மற்றும் வரவிருக்கும் மழைக்கு தேவையானவை என பிரித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்து வருகிறது தமிழ்நாடு அரசு. இந்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில்,




சென்னையில் 29.11.2023 அன்று குறுகிய நேரத்தில் சராசரியாக 15 செ.மீ மழை பெய்த போதிலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு மின் பராமரிப்பு பணிகள் 19.07.2023 அன்று தொடங்கப்பட்டு 29.11.2023 வரை நடைபெற்று 11,47,103 பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. 


1545 துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 6,25,341 மரக்கிளைகள் மின்வழித்தடங்களில் இருந்து அகற்றப்பட்டது. 55,830 பழுதடைந்த மின்கம்பங்கள் புதிதாக மாற்றப்பட்டுள்ளது.


சென்னையில் கடந்த 8 ஆண்டுகளில் கண்டிராத அளவு மிக கனமழை 29/11/2023 அன்று பெய்த போதிலும், 240 துணை மின் நிலையங்களில் உள்ள 1,877 மின்பாதைகள் மூலம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது அறிவுரையின் படி தடையற்ற மற்றும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டது. 


கனமழையினால் 8 மின்பாதைகளில் பழுது ஏற்பட்ட போதிலும் உடனடியாக மாற்றுப்பாதையில் சுமார் அரை மணி நேரத்தில் மின்னுாட்டம் வழங்கப்பட்டு, பழுதுகளும் சரிசெய்யப்பட்டது. சென்னையில் உள்ள 41,311 மின்மாற்றிகளில் 2 மின்மாற்றிகள் மட்டும் பழுது ஏற்பட்டது. அவைகளும் உடனடியாக பழுதுகள் சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது.


சென்னையில் சென்ற ஆண்டு மழையின் போது நீர் தேற்கிய பகுதிகளில் கண்டறியப்பட்ட 4658 பில்லர் பாக்ஸ்களின் உயரம் ஒரு மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டதால் தற்போது மேற்படி பகுதிகளில் பாதுகாப்பான தடையற்ற சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.


மேலும், பருவ மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு முழுவதும் 3,00,887 மின்கம்பங்கள், 14,187 கி.மீ மின் கம்பிகள், 19,759 மின்மாற்றிகள் மற்றும் மின் தளவாடப் பொருட்கள் கையிருப்பில் உள்ளது. மின்தடை ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்ய 15,300 களப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.


பொதுமக்கள் மின்தடை சம்பந்தமான புகார்களை மின்னக எண் - 94987 94987 வாயிலாக ஒரே நேரத்தில் 65 புகார்களை பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மின் பகிர்மான வட்ட மின்தடை நீக்கம் மையம் வழியாகவும் புகார்களை தெரிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.