தேவே கெளடா மருமகளுக்கே டிக்கெட் கொடுக்காத மதச்சார்பற்ற ஜனதாதளம்!

Su.tha Arivalagan
Apr 15, 2023,09:32 AM IST
பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவே கெளடாவின் மருமகள் பவானி ரேவண்ணாவுக்கு கர்நாடக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்படாதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த முடிவை தேவே கெளடாவும், பவானியின் கணவரும், தேவே கெளடாவின் மகனுமான எச். டி.ரேவண்ணாவும்தான் எடுத்துள்ளனர். குடும்ப அரசியல்செய்து வருகிறது கெளடா குடும்பம் என்ற குற்றச்சாட்டு அதிகரித்து வரும் நிலையில், பவானியை தேர்தலில் நிறுத்துவதில்லை என்று கெளடாவும், ரேவண்ணாவும் அறிவித்துள்ளனர்.



தற்போது எச்.டி.குமாரசாமியை தலைவராக கொண்டு இயங்கி வரும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் 2வது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. இதில் 49 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அதில் மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் மிக முக்கிய தொகுதியான ஹசன் தொகுதியின் வேட்பாளர் பெயர்தான் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. பாரம்பரியமாக கெளடா அல்லது அவரது குடும்பத்தினர்தான் அங்கு போட்டியிடுவது வழக்கம்.

இந்தத் தொகுதியில் பவானி ரேவண்ணா நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவருக்குப் பதில் முன்னாள் ஜில்லா பஞ்சாயத்துத் துணைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏ பிரகாஷின் மகனுமான  எச்.பி. ஸ்வரூப் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளனர். 

முன்னதாக ஹசன் தொகுதி வேட்பாளர் தேர்வு தொடர்பாக தேவே கெளடா, எச்.டி.ரேவண்ணா மற்றும் குமாரசாமி ஆகியோர் தனியாக ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனையில் பவானியை தவிர்ப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டதாம். மேலும் பவானி ரேவண்ணாவும் குமாரசாமியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினாராம். குடும்பத்தால், கட்சிக்கோ அல்லது கட்சியின் வெற்றி வாய்ப்புக்கோ பங்கம் வந்து விடக் கூடாது என்று அனைவரும் ஒருமனதாக தீர்மானித்த பிறகே பவானி ரேவண்ணாவுக்கு சீட் தருவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டதாம்.

ஆனால் எச்.டி. ரேவண்ணாவுக்கும், குமாரசாமிக்கும் இடையே உள்ளூர ஒரு புகைச்சல் இருந்து கொண்டே இருக்கிறது. ரேவண்ணாவைத் தன்னிடமிருந்து பிரிக்க சில சகுணிகள் வேலை செய்வதாக குமாரசாமி சமீபத்தில் பகிரங்கமாக புகார் கூறியிருந்தார். இந்த நிலையில்தான் ரேவண்ணாவின் மனைவிக்கு சீட் தராமல் சாதுரியமாக தவிர்த்துள்ளார்.

ஹசன் தொகுதியில் தேவே கெளடா 6 முறை வென்றுள்ளார். ஒரு முறை மட்டுமே அங்கு பாஜக வேட்பாளர் ப்ரீத்தம் கெளடா வெற்றி பெற்றார். தேவே கெளடா சார்ந்த ஒக்கலிகா சமுதாயத்தினர் பெரும்பான்மையாக உள்ள தொகுதி ஹசன். அங்கு அவரைத் தாண்டி யாரும் வெற்றி பெற முடியாது. அந்த வகையில் ப்ரீத்தம் கெளடாவின் வெற்றி மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.