பொங்கல் விழா.. களைகட்டியது.. தேவகோட்டையில் சமத்துவ பொங்கல் வைத்து மகிழ்ந்த மாணவர்கள்.. !

Manjula Devi
Jan 11, 2024,04:37 PM IST

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. 


இதில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமையில் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.


தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. கதிரவனுக்கும், உழவுத் தொழிலுக்கும் நன்றி செலுத்தும் வகையில் நாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்கிறோம்.இது மட்டுமல்லாமல் மாட்டுப்பொங்கல் அன்று ஒவ்வொரு பகுதியிலும் பெண்களுக்கான கோலம் போட்டி, ஓவியப்போட்டி, கரும்பு உடைத்தல் போட்டி, விளையாட்டுப் போட்டிகள் போன்றவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். 




ஆண்களின் வீரத்தை பறைசாற்றும் விதமாக காளைகளை அடக்குதல், மஞ்சுவிரட்டு, கபடி போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டு கௌரவிக்கப்படும். கிராமங்களில் வருடா வருடம் பொங்கலை சிறப்பிக்க கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.


இந்நிலையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது .இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று சொல்லி மகிழ்ந்தனர். சத்துணவு ஊழியர்கள் சார்பாக சர்கரை பொங்கல் சமைத்து மாணவருக்கு வழங்கப்பட்டது.




இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கான கோலப்போட்டி, விளையாட்டுப் போட்டி,பேச்சுப்போட்டி, போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது . மாணவியர்களுடன் மாணவர்களும் சேர்ந்து கோலம் போட்டு அசத்தினர்.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  விழாவின் முடிவில் பரிசும் வழங்கப்பட்டது.