தேவகோட்டை பள்ளியில்.. வளரிளம் பெண்களுக்கான.. மாதவிடாய் விழிப்புணர்வு முகாம்..!

Manjula Devi
Aug 06, 2024,10:26 AM IST

சிவகங்கை:  தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளியில் பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெற்றோர்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


நவீன மயமான இந்த காலகட்டத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் உணவு பழக்க வழக்க முறைகளால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் பெண் குழந்தைகள் சத்தான உணவுகளை தவிர்த்து வருவதால் மாதவிடாய் மற்றும் பிரசவ காலத்தில் உடல் பலமிழந்து விடுகின்றனர்‌. இதனை தடுக்க தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவிகளுக்காக தொற்று நோய் மற்றும் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.




ஆசிரியை முத்துலெட்சுமி  அனைவரையும் வரவேற்றார். விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கண்ணங்குடி  அரசு ஆரம்ப சுகாதர நிலைய  மருத்துவர்கள் ஜெய அபிராமி, யாழிசை ஆகியோர்  கலந்து கொண்டனர். பள்ளியில் 6,7,8ம் வகுப்பு மாணவிகளுக்கு இளம் வயதில் ஏற்படும் உடல் ரீதியான பிரச்சினைகள் குறித்தும், வரும் காலங்களில் நோய்களில் இருந்து தற்காத்து கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


தொடர்ந்து மாணவிகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் மாதவிடாய் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கங்கள், மாணவிகள் பூப்பெய்தும்போது ஏற்படும் பயத்தை போக்கவும், மாணவிகளின் பெற்றோர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை போக்கவும்  ஆலோசனை மேற்கொண்டனர்.




மாணவிகள் ரத்த சோகை நீங்க கடலை மிட்டாய்,பொறி உருண்டை ,பழங்கள்,கீரை வகைகள்,காய்கறிகளை சாப்பிட வேண்டும். மாணவர்கள் போதிய அளவு தண்ணீர் பருக வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுரை வழங்கினர். நிகழ்வில் ஏராளமான பெற்றோர் பங்கேற்றனர். செவிலியர் உமா மகேஸ்வரி, மருந்தாளுனர் கனிமொழி ஆகியோர் உடன்  இருந்தனர். விழா நிறைவாக ஆசிரியை முத்துமீனாள்   நன்றி கூறினார்.


பொதுவாக நாம் மருத்துவரை சென்று பார்த்தால் சுமார் 3 முதல் 5 நிமிடங்கள் மட்டுமே பேச இயலும். அதற்குள் நமக்கு சீட்டை எழுதி கொடுத்து விடுவார்கள். மீண்டும் சந்தேகம் கேட்கலாம் என்று  சென்றால் அவ்வளவு எளிதாக நாம் மருத்துவரை பார்க்கமுடியாது. ஆனால் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக  மாணவிகள், அவர்களின் அம்மாக்கள், ஆசிரியைகள் ஆகியோர் விளக்கமாக தங்களின் சந்தேகங்களை போக்கி கொண்டனர்.




தேவக்கோட்டை பள்ளியின் வழியாக தொடர்ந்து 9  ஆண்டுகளாக   இந்த நிகழ்வை ஏற்பாடு நடத்தி வருவது குறிப்பிடதக்கது. இதில் கலந்து கொண்டு சந்தேகங்களை விளக்கி சொல்லும் மருத்துவர்கள் அனைவரும் சேவை மனப்பான்மையுடன் இந்த பணியை செய்து உதவி வருகின்றனர். இது அவர்களின் சேவைகளை பாராட்டப்பட வேண்டியது நமது கடமையாகும்.