தேவகோட்டை பள்ளியில்.. ஒளி ஏற்றி வழிகாட்டி... ஃபேர்வெல் பார்ட்டி.. மாணவ, மாணவியர் செம உற்சாகம்!

Manjula Devi
Apr 11, 2024,09:55 AM IST

சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவ மாணவியர், ஒளி ஏற்றி ஏழாம் வகுப்பு மாணவர்களிடம் வழங்கி மகிழ்ச்சியுடன் ஃபேர்வெல் பார்ட்டியை கொண்டாடினர்.


நமது பள்ளிப் பருவத்தில் ஆண்டு முடியும் தருணத்தில் பிரியாவிடை நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் பிரிதல் என்பது நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. தற்காலிக பிரிவாகவே இருந்தாலும் கூட அடடா கேப் வந்துருச்சே என்ற ஆதங்கம் பலருக்கும் வருவது இயல்புதான். குறிப்பாக நம்முடன் பயிலும் சக மாணவர்கள் இனியும் நம்முடன் பயணிக்க மாட்டார்கள் என்ற மனநிலையுடன் மகிழ்ச்சியான துக்கத்தை அனுபவிக்கின்றனர். 




பள்ளி, ஆசிரியர், தோழிகள், என ஒவ்வொருவரையும் பிரிந்து செல்லும்போது நம் பள்ளிப் பருவத்தின் ஞாபகங்களை மட்டும் சுமந்து கொண்டு நம்மை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்கிறது. நம்முடன் பயணித்த சக மாணவர்கள் தங்களின் அனுபவங்களை எதிர்கால கனவுகளுடன் வெளிப்படுத்தி பெருமை காண்பர். நாம் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் நம் பள்ளிப்பருவ நிகழ்வு என்பது ஒருநாளும் நம்மை விட்டு நீங்காது. பள்ளிப் பருவத்தில் நல்லது, கெட்டது என்ற நாம் செய்த செயல்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்காமல் நம்முடனே பயணிக்கும். இந்தப் பள்ளிப் பருவ நிகழ்வு இது அழகான தருணம்.


அப்படிப்பட்ட அழகான தருணத்தில் உள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியின்  எட்டாம் வகுப்பு மாணவ மாணவியர் பிரியாவிடை  நிகழ்வு நடைபெற்றது. எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் தங்களின் பெற்றோர்களுடன் ஆசிரியரின் முன்னிலையில் வரிசைப்படி நின்றனர்.அவர்கள் முன்பாக ஏழாம் வகுப்பு மாணவர்கள் உட்கார்ந்து இருந்தனர். ஆசிரியர் முத்துமீனாள் அனைவரையும் வரவேற்றார்.




இந்த நிகழ்வில் மாணவியர்களின் அபிராமி அந்தாதி, திருக்குறள், நடனம் ஆகியவை நடைபெற்றது. மாணவியர் கல்விக் கடவுள் சரஸ்வதியை வணங்க, பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் ‌தீப ஒளியை ஏற்றினார். இதனைத் தொடர்ந்து எட்டாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களும் கையில் மெழுகுவர்த்தி தீபத்தை ஏற்றினர். மாணவி தனலட்சுமி உறுதிமொழி வாசிக்க அனைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு எட்டாம் வகுப்பு மாணவர்கள், தீப ஒளியை ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்தி கொடுக்க மாணவர்கள் வாங்கிக் கொண்டனர். 


அடுத்த வருடம் இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயில போகும் ஏழாம் வகுப்பு மாணவர்கள் தீப ஒளியை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர். பின்னர் இவ்விழா இனிதே நிறைவடைந்தது.



பிரிவு தற்காலிகமானதே.. வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயரும் மாணவர்கள், தாங்கள் கடந்து வந்த பாதையை மறக்காமல், ஆசிரியர்கள் போதித்த பாடங்களை மறக்காமல் தங்களுக்குப் பின்னால் வருபவர்களுக்கு விட்டுச் செல்ல வேண்டும்.. நல்லதொரு சமுதாயம் அமைய புதிய பாதை அமைத்துக் கொண்டே செல்ல வேண்டும். வாழ்த்துகள் மாணவச் செல்வங்களே!