மீண்டும் சர்ச்சை.. 3 முறை பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து.. விளக்கமளித்த துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின

Meenakshi
Oct 25, 2024,04:42 PM IST

சென்னை: சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3 முறை பாடப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எதனால் 3 முறை பாடப்பட்டது என்று துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.


சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட திட்டங்கள் வளர்ச்சித் துறையின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்பொழுது தமிழ்த்தாய் வாழ்த்தில் சில வரிகள் சரியாக பாடப்படாமல் சிறு தடங்கல் ஏற்பட்டது. அதனால், மீண்டும் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் 3 முறை பாடப்பட்டது. 


இது சலசலப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில்தான் டிடி தமிழ் நிலைய விழாவில் ஆளுநர் ஆர். என். ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிட நல் திருநாடு என்ற வார்த்தை இடம் பெற்ற வரி பாடப்படாமல் குழப்பமும், பெரும் பரபரப்பும் ஏற்பட்டது. இந்த நிலையில் மீண்டும் தமிழ்த் தாய் வாழ்த்து பாடுவதில் சிக்கல் ஏற்பட்டதால் இது சலசலசப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  துணை முதல்வர் செய்தியாளர்களை கூறியதாவது:




தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தில் பயிற்சி பெற்ற 19 நபர்களுக்கு நிறைவுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இந்த திட்டத்தில் அடுத்து பயன்பெறப்போகும் இளைஞர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடலாக செயல்பட்டு வருகிறது.


அரசு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தவறாக எல்லாம் பாடப்படவில்லை. பாடல் பாடப்படும் போது மைக் சரியாக வேலை செய்யவில்லை. இரண்டு, மூன்று இடங்களில் பாடப்படுபவரின் குரல் கேட்கவில்லை. அதனால், மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முழுமையாக கேட்கும்படி பாடப்பட்டது. அதைத் தொடர்ந்து தேசிய கீதமும் முறையாக பாடப்பட்டது. இதை ஒரு பிரச்சனையாக மாற்ற வேண்டாம் என விளக்கம் அளித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்