உங்களது அழுக்கேறிய மூளையை சுத்தப்படுத்த முடியாது.. காலாவது சுத்தமாகட்டும்.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி!

Su.tha Arivalagan
Oct 09, 2024,01:41 PM IST

சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படத்தை தரையில் போட்டு ஆந்திராவில் சிலர் மிதிக்கும் வீடியோ வைரலான நிலையில் அதுகுறித்து தனது பாணியில் அதிரடியான பதில்  கொடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.


திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்ட விவகாரத்தில் தேவையில்லாமல் நமது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெயரை அந்த மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் இழுக்கவே தேவையில்லாமல் இரு மாநில மக்களுக்கிடையே துவேஷம் ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.




ஆந்திராவில் சில விஷமிகள், கோவில் ஒன்றில், உதயநிதி ஸ்டாலினின் புகைப்படத்தை தரை விரிப்பு போல போட்டு அதில் கால்களை வைத்து தேய்த்து அவமதிப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அநாகரீக, அசிங்கம் பிடித்த செயல் குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகள்:


என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது!


கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனைப் பார்க்கிறேன்.


தந்தை பெரியார் மீது செருப்புகளை வீசினர். அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். பேரறிஞர் அண்ணாவை வசைபாடி மகிழ்ந்தனர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது ஏச்சுக்களையும் - பேச்சுக்களையும் தொடுத்தனர். நம் கழகத் தலைவர் மீது வீசப்படாத கடுஞ்சொற்கள் இல்லை.


அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. பிறப்பாலும் - மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையைப் பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் நம்முடைய வெற்றி.


நல்லா மிதிங்க.. கால்களாவது சுத்தமாகட்டும்


என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும்.


கழக உடன்பிறப்புகள் இதைக்கண்டு கோபமுற வேண்டாம். இதற்கு எதிர்வினையாற்றுவதை – உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்து, தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - கழகத்தலைவர் அவர்கள் வழியில் பகுத்தறிவு - சமத்துவப் பாதையில் என்றும் அயராது நடை போடுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்