சட்டசபை தேர்தலில் யாருக்கு வெற்றி.. இந்நிகழ்ச்சி உறுதி செய்கிறது.. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Meenakshi
Jan 24, 2025,07:42 PM IST

சென்னை: 2026 சட்டசபைத் தேர்தலில் யார் வெற்றிப்பெற போகிறார்கள் என்பதை இந்நிகழ்ச்சி உறுதி செய்கிறது. இதைபார்க்கும் எதிர்க்கட்சிகளுக்கு நிச்சயம் வயிற்றெரிச்சல் இருக்கும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்டோர் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணையும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்றது. 


அப்போது திமுகவில் இணைந்த நாம் தமிழர் கட்சியினர் பெரியார் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசாக வழங்கினர்.  பின்னர் நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அவரது பேச்சு:




மாற்றுக்கட்சியில் இருந்து விலகி, முத்தமிழறிஞர் கலைஞரின் உடன் பிறப்புகளாய் இன்று நீங்கள் தி.மு.கவில் இணைந்துள்ளீர்கள். இன்னும் 14 மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளது. சட்டப்பேரவை தேர்தலின் போது எதிர்க்கட்சியில்தான் மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்கள் இணைவதுதான் வழங்கம்.


ஆனால் தற்போது ஆளும் கட்சியில் மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து வருகிறார்கள். சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றிப்பெற போகிறார்கள் என்பதை இந்நிகழ்ச்சி உறுதி செய்கிறது. இதைபார்க்கும் எதிர்க்கட்சிக்கு நிச்சயம் வயிற்றெரிச்சல் இருக்கும்.


ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் அடையாளங்களை அழிக்க முயற்சிக்கிறார். திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது, தமிழ்த்தாய் வாழ்த்தை கொச்சைப்படுத்துவது, சட்டமன்றத்தை புறக்கணிப்பது உள்ளிட்ட செயல்களில் ஆளுநர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநரைக் கண்டிக்க தைரியம் இல்லாமல் இருக்கிறார்.


கழக தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற 10 தேர்தல்களிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. வருகின்ற ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலும் மிகப்பெரிய வெற்றியை பெறவிருக்கிறோம். இது மக்களுக்கான அரசு என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் அரிட்டாபட்டி டங்ஸ்டன் விவகாரம்தான். ஒன்றிய அரசு திட்டத்தை அறிவித்தபோதே கடும் எதிர்ப்பை பதிவு செய்தது தமிழ்நாடு அரசு.


அதன்பின்னர் கழக ஆட்சி இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் சட்டப்பேரவையில் உறுதியளித்தார். அவரின் உறுதி மொழியை தற்போது நிறைவேற்றிக்காட்டியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றார் அவர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்