வெளுக்கும் வெயில்.. கோடைகால சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது.. பள்ளிக்கல்வித்துறை கண்டிப்பு

Meenakshi
Apr 22, 2024,06:42 PM IST

சென்னை: கோடை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும்  மெட்ரிக் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் ஆண்டு தேர்வுகள் முடிவுற்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுத் தேர்வு எழுதும் 10,11,12 ஆகிய வகுப்புக்களை சேர்ந்தவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகளை பள்ளிகளில் சமீப காலங்களாக நடத்தி வருகின்றனர். இந்த சிறப்பு வகுப்புகளால் பள்ளியின் தேர்ச்சி விகிதம்  உயருகிறது. இதனால்  தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்துவதில் அதிகளவில் ஆர்வம் காண்பித்து  வருகின்றன. 




முன்னர் எல்லாம் ஒரு சில பள்ளிகளில் மட்டுமே நடைபெற்று வந்த, இந்த சிறப்பு வகுப்புகள் தற்பொழுது அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்களிடையே உளவியல் பிரச்சனை ஏற்படுவதாக புகார்களும் வரத்தொடங்கி காரணத்தால், இந்த சிறப்பு வகுப்புகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இந்த விடுமுறை காலங்களில் எந்த பள்ளிகளும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை அளித்துள்ளது.


இந்நிலையில், பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள் கோடை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. அதனை மீறி கோடைகால சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.