அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு.. அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள்!

Su.tha Arivalagan
Sep 16, 2023,05:19 PM IST

சென்னை: சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால், சிகிச்சைக்காக மூன்று அரசு மருத்துவமனைகளில்  சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 மருத்துவமனைகளிலும் தலா 100 படுக்கைகள் இந்த வார்டுகளில் இடம் பெற்றுள்ளன.


டெங்கு பாதிப்பு தொடர்பாக அரசு போதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், எனவே மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் தேவையான சிகிச்சை வசதிகள் ஆயத்த நிலையில் இருப்பதாகவும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.




தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பருவ கால நோய்களான டெங்கு, இன்ப்ளூயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்படைந்து வருகின்றனர். இதுவரை டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 120ஐ தாண்டி உள்ளது.  நாள்தோறும் 15 முதல் 20 நபர்கள் வரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.


எனவே டெங்கு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகள்  தீவிரப்படுத்தி வருகின்றனர். சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு தலா 100 படுக்கைகள் கொண்ட தனி வார்டுகள் அமைத்துள்ளனர். இதேபோல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் புதிதாக 65 படுக்கடைகள் கொண்ட தனி வார்டு மற்றும் கொசுவலைகள் வசதியுடன் 20 தனி வாடுகளும் அமைக்கப்பட்டுள்ளது. 


நேற்று டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட இருவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு 24 மணி நேரமும் கண்காணித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு கஞ்சி, உப்பு கரைசல், நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு சிகிச்சைக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அச்சப்படத் தேவையில்லை - அமைச்சர் 


இதற்கிடையே, டெங்கு குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்ததப்பட்டுள்ளன. பெரியஅளவில் பாதிப்பு உயரவில்லை. பெரியஅளவில் அச்சுறுத்தலும் இல்லை. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் வருவது போலத்தான் இப்போதும் பாதிப்பு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் அச்சப்படத் தேவையில்லை.