டெல்லி குடியரசு தின விழாவில்.. தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு அனுமதி.. முக்கிய "தீம்" இதுதான்!

Su.tha Arivalagan
Jan 05, 2024,09:59 PM IST

டெல்லி: டெல்லியில் ஜனவரி 26ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியும் இடம் பெறவுள்ளது. இதில் 2 தலைப்புகளில் தமிழ்நாடு அரசின் முக்கிய அம்சங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.


அனைவருக்குமான நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவையே அந்த தலைப்புகள். தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு, மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளது.


தமிழ்நாடு அலங்கார ஊர்தியின் பிரதான தலைப்பே உத்திரமேரூர் குடவோலை முறைதான். அதையே பிரதானமாக்கி தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் ஜனநாயகத்தில் தலை சிறந்தவர்கள் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்தான் இந்த குடவோலை முறை. அந்தக் காலத்திலேய ஜனநாயகப் பூர்வமாக வாக்களித்து மக்கள் பிரதிநிதிகள் தேர்தெடுக்கப்பட்டனர் என்பதுதான் குடவோலை முறையின் முக்கிய அம்சமாகும்.




உத்திரமேரூரில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவிலில் இதுதொடர்பான கல்வெட்டுகள் உள்ளன. அந்தக் கோவிலின் மாதிரியையும், கல்வெட்டின் மாதிரியையும்தான் தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்தி பிரதானமாக காட்சிப்படுத்துகிறது.


அனைவருக்குமான நீதி என்ற தலைப்பில் இடம் பெறும் காட்சியில் முக்கிய அம்சமாக, மனு நீதிச் சோழன் குறித்த ஊர்தி இடம் பெறும்.  


அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி பிரிவின் கீழ், தமிழ்நாடு அரசின் முக்கியத் திட்டங்களான நான் முதல்வன் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் ஆகியவை விளக்கப்படவுள்ளன. இந்த ஊர்தியில் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம், மகளிர் இலவசப் பேருந்து, கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை உள்ளிட்டவற்றின் பட சித்தரிப்பும் இடம் பெறுகிறது.