டெல்லியில் கொடுமை.. ஏசி மெஷின் தலையில் விழுந்து.. 18 வயது இளைஞர் பரிதாப மரணம்!

Manjula Devi
Aug 19, 2024,06:20 PM IST

டெல்லி:   டெல்லியில் வீட்டுக்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்த 18 வயது இளைஞர் மீது  ஏர் கண்டிஷனர் தலையில் விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




டெல்லியின் டோரிவாலா பகுதியில் வசித்து வந்தவர் ஜிதேஷ். இவருக்கு வயது 18. அதே பகுதியில் படேல் நகரைச் சேர்ந்தவர் பிரான்சு. இவருக்கு வயது 17. இவர்கள் இருவரும் சம்பவத்தன்று மாலை 6.30 மணி அளவில் வீட்டுக்கு வெளியே பேசிக் கொண்டிருந்தனர். ஜிதேஷ் தனது ஸ்கூட்டியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது இரண்டாவது மாடியில் இருந்த ஏர் கண்டிஷனரின் அவுட்லட் மெஷின் எதிர்பாராத விதமாக சரிந்து ஜிதேஷ் மீது விழுந்தது. 


இதில் ஜிதேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பிரான்சுவுக்கும் இதில் காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. டெல்லி போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஏர் கண்டிஷனர் தலையில் விழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும் இந்த விபத்து  யாருடைய அஜாக்கிரதையால் நிகழ்ந்தது என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இரண்டாவது மாடியில் இருந்து ஏர்கண்டிஷனர் விழுந்து ஒரு இளைஞர் உயிரிழந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காண்போரை நெஞ்சை நெகிழச் செய்கிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்