மது விலக்குக் கொள்கை வழக்கு... அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. டெல்லி கோர்ட் உத்தரவு

Su.tha Arivalagan
Jun 20, 2024,08:21 PM IST

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி கோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.


மது விலக்குக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 21ம் தேதி அதிரடியாக கைது செய்தனர். திகார் சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவாலுக்கு, லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு, அவர் பிரச்சாரம் செய்வதற்கு வசதியாக உச்சநீதிமன்றம் ஜூன் 2ம் தேதி வரை ஜாமீன் அளித்தது. இதைத் தொடர்ந்து ஜூன் 2ம் தேதி கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைந்தார். இதையடுத்து மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.




இந்த நிலையில் கெஜ்ரிவால் தரப்பில் ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஜாமீன் கோரி வழக்குத் தொடரப்பட்டது. முன்னதாக கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீது விசாரணை நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இதனால் ரோஸ் அவென்யூ கோர்ட்டில் இன்று நீதிபதி நியாய் பிந்து இந்த ஜாமீன் மனுவை விசாரித்து, கெஜ்ரிவாலுக்கு ரூ. 1லட்சம் ரொக்க ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட கோர்ட்டில் கெஜ்ரிவால் நாளையே ஜாமீன் மனுவை சமர்ப்பித்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.


இந்தத் தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறும், தாங்கள் அப்பீல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் தீர்ப்பை நிறுத்தி வைக்க நீதிபதி மறுத்து விட்டார். இதையடுத்து கெஜ்ரிவால் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வரவுள்ளார்.